புதுச்சேரி

புதுவை ரெயின்போ நகரில் மர்மபொருள் வெடித்து பெண் படுகாயம்- போலீசார் விசாரணை

Published On 2023-02-06 14:27 IST   |   Update On 2023-02-06 14:27:00 IST
  • சாரதா வீட்டில் தனியாக இருந்தார். காலை 11.30 மணியளவில் அவரின் வீட்டில் பலத்த வெடி சத்தம் கேட்டது.
  • போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த சாரதாவை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

புதுச்சேரி:

புதுவை ரெயின்போ நகர் 3-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 50). வட்டிக்கடை நடத்தி வருகிறார்.

இவரது மனைவி சாரதா(43). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இன்று காலை வழக்கம்போல குருமூர்த்தியும், மகன்களும் வட்டிக்கடைக்கு சென்றுவிட்டனர். சாரதா வீட்டில் தனியாக இருந்தார். காலை 11.30 மணியளவில் அவரின் வீட்டில் பலத்த வெடி சத்தம் கேட்டது.

அருகிலிருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்தனர். வீட்டின் மெயின்கதவு நிலையோடு பெயர்ந்து கிடந்தது. அருகிலிருந்த வீட்டின் ஜன்னல் விரிசல் விட்டிருந்தது. வீட்டுக்குள் சாரதா காயமடைந்து கிடந்தார். உடனடியாக போலீசார், தீயணைப்பு துறைக்கு தகவல் தரப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த சாரதாவை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீயணைப்புத்துறையினர் அங்கு வந்து தீயை அணைத்தனர். சிலிண்டர் வெடித்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.

ஆனால் 2 சிலிண்டரும் முழுமையாக இருந்தது. இதனால் வீட்டில் வெடிசத்தம் ஏற்பட்டது எதனால்? வெடிமருந்து வைத்திருந்தார்களா? நாட்டு வெடிகுண்டு ஏதும் வீசப்பட்டதா? எனபோலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News