கோப்பு படம்.
- திருபுவனை அருகே கணவரை விட்டு பிரிந்த வேதனையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
- இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெயந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெற புதுவை ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
புதுச்சேரி:
திருபுவனை அருகே கணவரை விட்டு பிரிந்த வேதனையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருபுவனை அருகே கலிதீர்த்தாள்குப்பம் வி.பி.சி. நகரை சேர்ந்த வர் கலியமூர்த்தி. இவரது மனைவி ஜெயந்தி. இவர்களது மகள் கலைச்செல்வி (வயது37).
இவருக்கும் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த இளங்கோ என்பவரும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால்கலைச்செல்வி கணவரை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கலைச்செல்வி வேலை செய்து வந்தார். இதற்கிடையே கணவரை விட்டு தனிமையில் வசித்து வந்ததால் வேதனையடைந்து கலைச்செல்வி 3 முறை தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவ்வப்போது கலைச்செல்வியை அவரது தாயார் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெயந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெற புதுவை ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த கலைச்செல்வி கணவரை விட்டு பிரிந்து சென்றதை எண்ணி உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார்.
உடல் முழுவதும் தீ பரவியதால் வலி தாங்காமல் கலைச்செல்வி அலறல் சத்தம் போட்டார். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தீயை அணைத்து கலைச்செல்வியை அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் கலைச்செல்வியை மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கலைச்செல்வி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது தாய் ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.