புதுச்சேரி

மன்சுக் மாண்டவியா

மத்திய சுகாதாரத்துறை மந்திரி தமிழகம் வருகை- இன்று புதுச்சேரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

Published On 2022-06-24 20:06 GMT   |   Update On 2022-06-24 20:41 GMT
  • மருத்துவ பூச்சியியலில் பயிற்சிக்கான சர்வதேச செயல் திறன் மையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
  • ஜிப்மர் வளாகத்தில் சர்வதேச பொது சுகாதார பள்ளியை தொடங்கி வைக்கிறார்.

மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்றும் நாளையும், புதுச்சேரி மற்றும் தமிழக நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக அவர் நேற்றிரவு சென்னை வந்தார்.

முதல்நாள் நிகழ்ச்சியாக இன்று புதுச்சேரியில் மருத்துவ பூச்சியியலில் பயிற்சிக்கான சர்வதேச செயல்திறன் மையத்துக்கு அடிக்கல் நாட்டுவார். தொடர்ந்து நோய்கள் கட்டுப்பாட்டு மையத்தில் நவீன வசதிகளை பார்வையிடும் அவர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடுவார்.

ஜிப்மர் வளாகத்தில் சர்வதேச பொது சுகாதார பள்ளியை தொடங்கி வைக்கும் மத்திய மந்திரி மாண்டவியா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், எம்.பி.க்கள் செல்வகணபதி, வைத்திலிங்கம், ரவீந்திரன், ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மன்சுக் மாண்டவியா, ஆவடியில் மத்திய அரசின் சுகாதார திட்ட நலவாழ்வு மையம் மற்றும் ஆய்வகத்துக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டுவார். இதனைத் தொடர்ந்து மாநில இ-தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குனருடன் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

கிண்டியில் உள்ள மத்திய பெட்ரோ ரசாயன பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் புதிய தொழில்நுட்ப மையத்துக்கான அடிக்கல்லையும் அவர் நாட்ட உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News