புதுச்சேரி

புதுவையில் மீண்டும் தி.மு.க. ஆட்சி- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

Published On 2022-12-12 12:41 IST   |   Update On 2022-12-12 12:43:00 IST
  • புதுவையை தமிழகத்திலிருந்து பிரித்து பார்க்க முடியாது. அதனால்தான் புதுவையும் சேர்த்து 40 தொகுதிகள் என கூறுகிறோம்.
  • நிச்சயமாக மீண்டும் புதுவையில் திராவிட மாடல் ஆட்சி உதயமாகும். அதில் யாரும் சந்தேகப்பட வேண்டாம்.

புதுச்சேரி:

புதுவை மாநில முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாநில அவைத் தலைவருமான எஸ்.பி. சிவக்குமார்-சித்ரா சிவக்குமார் ஆகியோரின் மகன் ஆனந்தராஜிற்கும், திருப்பத்தூர் சாமிசெட்டி-சித்ராசாமிசெட்டி ஆகியோரின் மகள் மீனாட்சிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இவர்களது திருமணம் புதுவை-திண்டிவனம் சாலை பட்டானூர் அருகே உள்ள சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (திங்கட்கிழமை) நடந்தது.

திருமணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி தாலி எடுத்து கொடுத்தார். மணமகன் ஆனந்தராஜ் மனமகள் மீனாட்சி கழுத்தில் தாலி கட்டினார். தொடர்ந்து மணமக்கள் முதலமைச்சர் ஸ்டாலின்-துர்கா ஸ்டாலின் ஆகியோர் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

மணமக்களை வாழ்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:-

தலைவர் கலைஞரை கல்லூரிக்கு சிறப்பு பேச்சாளராக பேச வைக்க எஸ்பி.சிவக்குமார் அழைத்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, நீண்டநேரம் பேச வேண்டும் என சிவக்குமார் கட்டளையிட்டார்.

இதற்கு கலைஞர் பேசும்போது, இளம்கன்று பயமறியாது. சிவக்குமார் போன்ற இளைஞர்கள் கட்டளையிட, அதை நிறைவேற்ற நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம் என பேசினார். எஸ்.பி.சிவக்குமார் துணிச்சல் மிக்கவர்.

40 ஆண்டு கட்சிப்பணியை நிறைவு செய்தபோது, கலைஞர், பேராசிரியர், புதுவை மக்களின் நன்மதிப்பை பெற்றவர் என பாராட்டியிருந்தேன்.

புதுவை அமைச்சராக அவர் ஆற்றிய பணியை மறக்க முடியாது. புதுவையை தமிழகத்திலிருந்து பிரித்து பார்க்க முடியாது. அதனால்தான் புதுவையும் சேர்த்து 40 தொகுதிகள் என கூறுகிறோம்.

புதுவை இணைபிரியாத ஊர். பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த ஊர் என்பதால், திராவிட இயக்கத்தின் இலக்கிய தலைநகர் என சொல்லக்கூடிய ஊர் புதுவை. கலைஞரின் கொள்கை உரம் பெற்ற ஊர் புதுவை. சாந்தா என்ற பழனியப்பன் நாடகத்தில் சிவகுரு வேடம் ஏற்று கலைஞர் நடித்தார். அந்த நாடகம் பாதியிலேயே புதுவையில் நிறுத்தப்பட்டது. ஒரு கலக கும்பல் மிகப்பெரும் கலவரத்தை ஏற்படுத்தினர். கலைஞர் பலமாக தாக்கப்பட்டார்.

அவரை சாக்கடையில் தூக்கி வீசி சென்றனர். அவர் இறந்துவிட்டார் என பலரும் நினைத்தனர். மறுநாள் காலை பெரியார் கேள்விப்பட்டு ஓடோடி வந்து மடியில் படுக்கவைத்து, மருந்து போட்டு ஈரோடு அழைத்து சென்றார்.

குடியரசு வார இதழின் துணை ஆசிரியராக பணியாற்ற கலைஞருக்கு உத்தரவிட்டார். பெரியாருடன் பழக புதிய பாதையை ஏற்படுத்திய ஊர் புதுவை. இதனால் புதுவை என்றால் கலைஞருக்கு தனி பாசம் வந்துவிடும்.

அவருக்கு மட்டுமல்ல, அவரின் மகனான எனக்கும் அந்த பாசம் வந்துவிடும். எனவே அந்த கொள்கை உணர்வோடுதான் சிவக்குமார் இல்ல விழாவில் பங்கேற்க வந்துள்ளேன்.

25 ஆண்டாக சிவக்குமாரை நான் நன்கு அறிவேன். அப்போது எப்படி கொள்கை பிடிப்போடு பார்த்தேனோ? அதே கொள்கை பிடிப்போடு இன்றும் உள்ளார். அவர் பேசும்போது, எனக்கு எதுவும் வேண்டாம் என்றார். தேர்தல் சமயத்திலும் இதேபோல சொல்ல வேண்டும்.

அவர் சொல்வார், அவர் உரிமை. ஆனால் கட்சித்தலைமை சொன்னால் கட்டுப்பட்டு நடப்பார்.

நாஜிம் பேசும்போது, தெற்கு, மேற்கே, கிழக்கே அனுப்புவோம் என்றார். எதையும் பெரிதுபடுத்த விரும்பவில்லை. போட்டி இருந்தால்தான் கட்சி வளரும். கலைஞரே போட்டி நமக்குள் இருக்க வேண்டும், பொறாமையாக இருக்கக்கூடாது என சொல்வார்.

கலைஞர் உத்தரவிட்டால் அதை அப்படியே நிறைவேற்றுவார்கள். அதேபோல கலைஞரின் மகனான நான் உத்தரவிடுவதை அப்படியே ஏற்றுக்கொள்கிற தொண்டர்கள் கழகத்தில் உள்ளார். இதுதான் கழகத்திற்கு பெருமை.

தலைமையின் கீழ் எந்தவித மாறுபாடும் இன்றி செயல்பட்டு வருபவர்களில் சிவக்குமாரும் ஒருவர். எனவே கட்சியின் தலைவர் என்ற முறையில் மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன், போற்றுகிறேன்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உதயசூரியன் ஆட்சி மலர்ந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சி என பெருமையோடு சொல்கிறோம்.

அப்படிபட்ட திராவிட மாடல் ஆட்சி புதுவைக்கு வருவது எளிதுதான். உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் அந்த ஆசை உண்டு. கடந்த சட்டமன்ற தேர்தலில்கூட வாய்ப்பு கிட்டியிருக்கும். ஆனால் போய்விட்டது. புதுவையில் தற்போது ஒரு ஆட்சி நடந்து வருகிறது. அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான். முதலமைச்சர் ஒருவர் உள்ளார், உயர்ந்த மனிதர்தான், உயரத்தில். ஆனால் அடிபணிந்து கிடக்கிறார்.

அவர் நல்லவர்தான், குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால் நல்லவர் வல்லவராக இருக்க வேண்டாமா? புதுவையில் கவர்னர் ஆட்டிப்படைக்கும் வகையில் ஆட்சி நடந்தால் வெட்கப்பட வேண்டாமா? வெகுண்டு எழ வேண்டாமா? அடங்கி, ஒடுங்கி ஒரு ஆட்சி நடப்பது புதுவை மாநிலத்துக்கு மிகப்பெரும் இழுக்காக உள்ளது.

ஏதாவது ஒரு நன்மை நடந்துள்ளதா? இல்லை. இதனால்தான் நம் ஆட்சி வரவேண்டும் என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். புதுவையில் ஏற்கனவே ராமச்சந்திரன், ஜானகிராமன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வின் ஆட்சி நடந்துள்ளது.

நிச்சயமாக மீண்டும் புதுவையில் திராவிட மாடல் ஆட்சி உதயமாகும். அதில் யாரும் சந்தேகப்பட வேண்டாம். வைத்திலிங்கம் காங்கிரஸ் முதலமைச்சராக கூட்டணி ஆட்சி நடக்கவில்லையா? நாராயணசாமி நம்மோடு இணைந்து கூட்டணி ஆட்சி நடக்கவில்லையா? எந்த ஆட்சி நடந்தாலும் புதுவையில் மதவாத ஆட்சி உருவாகிவிடக்கூடாது என்பதில் கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும்.

புதுவையில் விரைவில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளீர்கள். தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் நாம் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கோடு பணியினை தொடங்குங்கள் என கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் சமயத்தில் யாரோடு கூட்டணி என்பதை முடிவு செய்வோம். வெற்றிக்கு அச்சாரமாக நாம் தற்போதே பணியாற்ற தொடங்க வேண்டும்.

அனைவரும் இது குடும்ப விழாவாக நடக்கிறது என கூறினர். இதைத்தான் அண்ணா, அனைவரையும் தம்பி, தம்பி என்றார். அண்ணன், தம்பி, அக்கா, தங்கை அனைவரையும் ஒன்று சேர்த்து உடன்பிறப்பே என கலைஞர் அழைத்தார். அவர்கள் வழியில் உங்களை வழிநடத்தும் பொறுப்பேற்றுள்ள நான் உங்களில் ஒருவனாக கடமையாற்றி வருகிறேன்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் எந்த சூழலிலும் உங்களோடு ஒருவனாக இணைந்து நின்று பணியாற்ற காத்திருக்கிறேன். சிவக்குமார் ஆற்றிய பணிகள் அளவிட முடியாதது. அவரின் இல்ல விழா நம் விழாவாக கருதுகிறோம். உங்களோடு சேர்ந்து நானும் மணமக்களை வாழ்க, வாழ்க என வாழ்த்துகிறேன்.

புரட்சிக்கவிஞர் கூறியபடி, வீட்டுக்கு விளக்காய், நாட்டுக்கு தொண்டர்களாய் வாழுங்கள் என வாழ்த்துகிறேன். பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்பெயர் சூட்டுங்கள் என மணமக்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

புதுவை மாநில எதிர்கட்சித்தலைவர் சிவா வரவேற்றார். திருமண விழாவில் தமிழக அமைச்சர்கள் நேரு, பொன்முடி, ஆர்.கே. பன்னீர்செல்வம், செஞ்சி மஸ்தான், மாவட்ட செயலாளர் புகழேந்தி, மு.க.தமிழரசன், புதுவை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், அனிபால்கென்னடி, நாகதியாகராஜன், சம்பத், செந்தில்குமார் மற்றும் தமிழக மாநகராட்சி, நகராட்சி மேயர்கள், கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். முடிவில் எஸ்பி.சிவக்குமார், மணமகன் ஆனந்தராஜ் ஆகியோர் நன்றி கூறினர். முன்னதாக திருமணத்திற்கு வந்தவர்களை எஸ்பி.சிவக்குமார், அவரின் மனைவி சித்ரா, மகள் காயத்ரி ஆகியோர் வரவேற்றனர்.

Tags:    

Similar News