புதுவை சட்டசபை மீண்டும் 22-ந் தேதி கூடுகிறது ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்
- புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
- தொடர்ந்து சட்டசபை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
தொடர்ந்து சட்டசபை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதால் கூட்டத்தொடர் காலவரை யின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே பட்ஜெட்டுக்கு மத்திய நிதி, உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.
இதையடுத்து மீண்டும் சட்டசபை 18-ந் தேதி கூடும், 22-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில் புதுவை சட்டசபை 12 நாட்களுக்கு பிறகு மீண்டும் 22-ந் தேதி கூட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு நிதிபொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதன்பின் அலுவல் ஆய்வுக்குழு கூடி பட்ஜெட் கூட்டத்தொடர் நாட்களை முடிவு செய்ய உள்ளது. இருப்பினும் 30-ந் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடையும் என தெரிகிறது. அதிகபட்சமாக பட்ஜெட் ஒரு வாரம் மட்டுமே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.