கோப்பு படம்.
- புதுவையில் தற்போது நகர பகுதிகள் மட்டுமின்றி கிராம புற பகுதிகளிலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
- அவரது சட்டை பையில் சிறுசிறு பொட்டலங்களாக மொத்தம் 125 கிராம் கஞ்சா வைத்திருந்தார்.
புதுச்சேரி:
கோர்ட்டு வளாகம் எதிரே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுவையில் தற்போது நகர பகுதிகள் மட்டுமின்றி கிராம புற பகுதிகளிலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. கஞ்சாவை விற்பனையை கட்டுபடுத்தும் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
மேலும் கஞ்சா விற்பவர்களை கைது செய்து ஜெயிலில் அடைத்து வருகின்றனர். ஆனாலும் கஞ்சா விற்பனையை முற்றிலுமாக தடுக்க முடியவில்லை.
இந்த நிலையில் புதுவை-கடலூர் சாலையில் கோர்ட்டு வளாகம் எதிரே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் ஒரு வாலிபர் நைசாக நழுவி செல்ல முயன்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து அவரது சட்டைபையில் சோதனை நடத்தினர்.
அவரது சட்டை பையில் சிறுசிறு பொட்டலங்களாக மொத்தம் 125 கிராம் கஞ்சா வைத்திருந்தார். அந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் வில்லியனூர் அருகே பொறையூர் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தேவநாதன்(வயது19) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வேதநாதனை போலீசார் கைது செய்தனர்.