புதுச்சேரி

தமிழகத்தையொட்டிய புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு

Published On 2024-03-30 06:45 GMT   |   Update On 2024-03-30 06:45 GMT
  • பறக்கும் படையினர், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • பாகூர் தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

புதுச்சேரியையொட்டிய மாநில எல்லைப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பறக்கும் படையினர், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும் தேர்தல் பொது பார்வையாளராக பியூஷ் சிங்லாவும், தேர்தல் காவல் பார்வையாளராக அமன்தீப் சிங்ராய் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் காவல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அமன்தீப் சிங் ராய் புதுச்சேரி எல்லைப் பகுதியான திருக்கனூரில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது வாகன சோதனையின் போது எந்தவித பாரபட்சமும் இன்றி அவ்வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சித ரெட்டி, திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் தேர்தல் துறையின் சோதனைச் சாவடி ஊழியர்கள், துணை ராணுவ படையினர் உடனிருந்தனர்.

தொடர்ந்து எல்லைப் பகுதிகளான முள்ளோடை, சோரியாங்குப்பம், மணமேடு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளுக்கு சென்று அவர் ஆய்வு செய்தார்.

இதேபோல் தேர்தல் பொதுப்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பியூஷ் சிங்லா ஏம்பலம், பாகூர் தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News