தமிழக குற்றவாளிகள் புதுவையில் பதுங்கல்- ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை
- தமிழக எல்லையையொட்டி புதுவை பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
- ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டு மற்றும் பயங்கர ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைத்திருக்கிறார்களா? என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் குற்ற சம்பவங்களை தடுக்க புதுவை காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரவுடிகள் மீதான கண்காணிப்பு நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்படுள்ளன.
இதற்கிடையே புதுவை மாநிலத்தையொட்டி உள்ள தமிழக பகுதியான கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குற்றவாளிகள் புதுவையில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக புதுவை போலீசாருக்கு தகவல் வந்தது.
மேலும் ஊருக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்ட ரவுடிகளும் அவரவர் வீடுகளில் பதுங்கியிருப்பதாக புதுவை போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து புதுவையில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக தமிழக எல்லையையொட்டி புதுவை பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டு மற்றும் பயங்கர ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைத்திருக்கிறார்களா? என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபற்றி புதுவை போலீசார் தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர். ரவுடிகளின் வீடுகளில் போலீசாரின் அதிரடி சோதனையால் அவர்களது குடும்பத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர்.