புதுச்சேரி

புதுவையில் கடல் அலையில் சிக்கி பிளஸ்-2 மாணவர் பலி

Published On 2022-06-09 10:13 GMT   |   Update On 2022-06-09 10:13 GMT
  • புதுவை தவளகுப்பம் அருகே நண்பர்களுடன் கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி பிளஸ் -2 மாணவர் பலியானார்.
  • சுற்றுலா வந்த இடத்தில் கடலில் மூழ்கி மாணவர் இறந்த சம்பவம் அவருடன் வந்த நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

பாகூர்:

திண்டுக்கல் சிறுமலை தாழகடை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் கபிலன் (வயது 18). இவர் பிளஸ் -2 தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவிற்காக காத்திருந்தார். இந்த நிலையில் கபிலனும் அவரது நண்பர்கள் 7 பேரும் புதுவைக்கு பஸ்சில் சுற்றுலா வந்தனர். புதுவையில் பல்வேறு இடங்களில் சுற்றிப்பார்த்த அவர்கள் இன்று காலை தவளகுப்பம் அருகே புதுக்குப்பம் கடற்கரைக்கு வந்தனர். கடல் அழகை ரசித்த அவர்கள் பின்னர் கடலில் இறங்கி குளித்தனர்.

அப்போது எழுந்த ராட்சத அலையில் கபிலன் சிக்கிக்கொண்டார். அவரை அருகில் குளித்துக் கொண்டிருந்த நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் இயலவில்லை. கபிலனை அலை இழுத்துச் சென்றது. உடனே அவரது நண்பர்கள் அபய குரல் எழுப்பினர். இதையடுத்து அங்கிருந்த மீனவர்கள் விரைந்து வந்து கடலில் மூழ்கிய கபிலனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கபிலன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தவளகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுற்றுலா வந்த இடத்தில் கடலில் மூழ்கி மாணவர் இறந்த சம்பவம் அவருடன் வந்த நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News