வில்லியனூர் அருகே ஓட்டல் ஊழியர் அடித்து கொலை
- வில்லியனூர் அருகே ஓட்டல் ஊழியரை மர்மநபர்கள் அடித்து கொலை செய்து உடலை வாய்க்காலில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கொலையாளிகளை அடையாளம் காண கரிக்கலாம்பாக்கத்தில் இருந்து கீழ்குமாரமங்கலம் வரை உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
சேதராப்பட்டு:
வில்லினூர் அருகே கரிக்கலாம்பாக்கம் அருகே தமிழக பகுதியான கீழ் குமாரமங்கலத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அசோக்(வயது25). இவர் புதுவையில் உள்ள பிரபல ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி அகிலா என்ற மனைவி 1½ வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.
இந்தநிலையில் நேற்று அசோக் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். மாலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அசோக் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் கரிக்கலாம்பாக்கம்-குமாரமங்கலம் ரோட்டில் சாராயக்கடை பின்புறம் இன்று காலை அசோக் தலையில் ரத்த காயங்களுடன் அருகில் உள்ள வாய்க்கால் ஓடையில் பிணமாக கிடந்தார். அவ்வழியாக வயல் வேலைக்கு சென்றவர்கள் இதனை பார்த்து கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், வில்லியனூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அசோக்கை யாரோ மர்மநபர்கள் வேறு இடத்தில் அடித்து கொலை செய்து நள்ளிரவில் உடலை எடுத்து வந்து வாய்க்காலில் வீசி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அசோக்கை கொலை செய்த கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலையாளிகளை அடையாளம் காண கரிக்கலாம்பாக்கத்தில் இருந்து கீழ்குமாரமங்கலம் வரை உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அசோக் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அதன் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.