புதுச்சேரி

ஆன்லைன் மூலம் ரூ.2.86 கோடி மோசடி- மயக்கும் வசீகர குரலில் பேசி பணம் பறிக்கும் பெண்கள்

Published On 2023-11-07 05:03 GMT   |   Update On 2023-11-07 05:03 GMT
  • திருமண வரன் பார்த்து தருவதாகவும் அதிகளவில் மோசடி நடந்து வருகிறது.
  • தீபாவளியை முன்னிட்டு குறைந்த விலையில் பட்டாசுகள் தருவதாகவும் மோசடியில் ஈடுபடுகின்றனர்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் மோசடி அதிகளவில் நடந்து வருகிறது. கடந்த 2 மாதத்தில் மட்டும் ஆன்லைன் மூலம் ரூ.2 கோடியே 86 லட்சத்து 23 ஆயிரம் மோசடி நடந்துள்ளது.

பணத்தை இழந்தவர்களில் பெரும்பாலானோ ர் டாக்டர்கள், என்ஜினீயர்கள் தான். மோசடிக்காரர்கள் ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாகவும், ஆன்லைனில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகவும், மற்றும் ஆண்களை மயக்கும் வசீகர குரலில் பெண்கள் நூதனமாக பேசியும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். திருமண வரன் பார்த்து தருவதாகவும் அதிகளவில் மோசடி நடந்து வருகிறது.

தற்போது புதிய வகையாக தீபாவளியை முன்னிட்டு குறைந்த விலையில் பட்டாசுகள் தருவதாகவும் மோசடியில் ஈடுபடுகின்றனர்.

ஆன்லைன் மோசடியை தடுக்க போலீசார் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதனை தடுக்க முடியவில்லை. பேராசை மற்றும் சபலத்தால் மோசடி அதிகரித்துதான் வருகிறது. சொகுசு கார் பரிசு விழுந்ததாக விவசாயி ஒருவரிடம் ரூ.17 லட்சம் பறித்துள்ளனர்.

ஆன்லைன் மோசடியை தடுப்பது குறித்து புதுவை டி.ஐ.ஜி. பிரிஜேந்திர குமார் யாதவ் கூறியிருப்பதாவது:-

இணையதள மோசடியில் பணத்தை இழந்தால் உடனே புகார் செய்தால் மட்டுமே பணத்தை மீட்க முடியும். காலதாமதம் ஏற்பட்டால் மோசடிக்காரர்கள் அவர்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை மற்ற கணக்கிற்கு மாற்றி விடுவார்கள்.

அவ்வாறு செய்து விட்டால் அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்வது மிகவும் கடினம். நாம் நடவடிக்கை எடுக்கும் போது அவர்களது வங்கி கணக்கை முடக்குவதன் மூலம் பணத்தை மீட்க முடியும்.

சைபர் கிரைம் செல் ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த பொதுமக்கள் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் தான் புகார் அளிக்க வேண்டும் என்று இல்லை. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் சைபர் கிரைம் செல் உள்ளது.

எனவே அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் கூட புகார் செய்யலாம். பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News