புதுச்சேரி

உலக அளவில் 8 பேரில் ஒருவருக்கு மனநல பாதிப்பு- புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்

Published On 2022-10-11 09:25 IST   |   Update On 2022-10-11 09:25:00 IST
  • மனநல நோய் ஒருவரின் எண்ணம், செயல், உணர்வுகளை பாதிக்கிறது.
  • மனநலம் இன்றி உடல் நலம் இல்லை. அதேபோல் உடல்நலம் இன்றி மனநலம் இல்லை.

புதுச்சேரி:

புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10-ந்தேதி உலக சுகாதார நிறுவனத்தால் 'உலக மனநல தினம்' அனுசரிக்கப்படுகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் 'உலக மக்கள் அனைவரின் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயலே முதன்மையானதாக கருத வேண்டும்' என்பதே. உலக அளவில் 8 பேரில் ஒருவர் மனநல பாதிப்பு உள்ளவராக உள்ளனர். இளம் வயதிலேயே அதிக பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

உலக சுகாதார நிறுவனம் 10 முதல் 19 வயது வரையிலுள்ள வளர் இளம் பருவத்தினரில் 7 பேரில் ஒருவர் மனநல பிரச்சினையில் உள்ளதாக தெரிவிக்கிறது.

இந்த வயதினர் ஆண்டு தோறும் சராசரியாக 45,800 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதாவது 11 நிமிடத்திற்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலக அளவில் தற்கொலை எண்ணங்கள் மக்களிடையே அதிகரித்து உள்ளது. மனப்பதற்றம் மற்றும் மனஅழுத்த நோய்கள் 25 சதவீதம் அதிகரித்து உள்ளது. வளர்ந்து வரும் சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், நீண்ட நாள் கருத்து வேறுபாடுகள், வன்முறை, ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட அவசர கால நோய்கள் போன்றவைகளினால் மக்கள், மனநல பாதிப்பு அடைகின்றனர்.

மனநல நோய் ஒருவரின் எண்ணம், செயல், உணர்வுகளை பாதிக்கிறது. மனநலம் இன்றி உடல் நலம் இல்லை. அதேபோல் உடல்நலம் இன்றி மனநலம் இல்லை. இலவசமாக மனநல சிகிச்சை பல்வேறு மருத்துவமனைகளில் அளிக்கப்படும். மனநல சிகிச்சை பெற மக்கள் தயக்கத்தை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News