புதுச்சேரி

கோப்பு படம்.

ஸ்மார்ட் சிட்டி பணிகள்-ரங்கசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல்

Published On 2022-08-19 09:05 GMT   |   Update On 2022-08-19 09:05 GMT
  • புதுவை மாநிலத்தில் ரூ.ஆயிரத்து 850 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. .
  • ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் ஒரு சில பணிகளே முடிக்கப்பட்டுள்ளது. பல பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது ரூ.300 கோடி மதிப்பில் பணிகளை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.

புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் ரூ.ஆயிரத்து 850 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் ஒரு சில பணிகளே முடிக்கப்பட்டுள்ளது. பல பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது ரூ.300 கோடி மதிப்பில் பணிகளை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. இதை தேசிய கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் சட்டசபை வளாகத்தில் நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்தார். அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் நேரு, பிரகாஷ்குமார், ஸ்மார்ட் சிட்டி திட்ட தலைமை செயலாக்க அதிகாரி அருண், இணை அதிகாரி சுதாகர், தேசிய கட்டுமான கழக தலைமை பொது மேலாளர் ராவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், குபேர் மார்க்கெட் பகுதியில் 50 ஆயிரம் சதுர அடியில் நவீன வணிக வளாகம் கட்டுதல், பஸ்நிலையத்தை 25 ஆயிரம் சதுர அடி வணிக வளாகத்துடன் நவீனப்படுத்துதல், கிழக்கு கடற்கரை சாலையில் புதிய புறநகர் பஸ்நிலையம் அமைத்தல், தாவரவியல் பூங்காவை மேம்படுத்துதல், பழைய சிறை வளாகத்தில் வணிக வளாகம் கட்டுதல் உட்பட பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பெரியவாய்க்காலை 3 கி.மீ. புனரமைத்து அழகுபடுத்துதல், நடைபாதை, மிதிவண்டி பாதைஅமைத்தல், இருக்கை, உணவு விடுதி அமைத்தல், சுதேசி மில் வளாகத்தில் சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்துவது குறித்து திட்டமதிப்பீடு முன் வைக்கப்பட்டது.

இந்த திட்டங்களுக்கு விரைவில் டெண்டர் கோரப்பட்டு பணிகளை தொடங்க முதல்-அமைச்சர் ரங்கசாமி ஒப்புதல் அளித்தார்.

Tags:    

Similar News