null
ஆதார், செல்பொன் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கு-விவசாயிகளுக்கு தபால் துறை அறிவுறுத்தல்
- விவசாயிகள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல், நிதி உதவியை பெற இயலவில்லை.
- கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.
புதுச்சேரி:
புதுவை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் துரைராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் இந்த மாதம் வழங்க உள்ள 13-வது தவணைத் தொகையை பெறுவதற்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம். எனவே விவசாயிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.
மேலும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் பெறப்பட்ட தகவலின்படி, புதுவை அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி பகுதிகளில் சுமார் 7 ஆயிரம் விவசாயிகள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல், நிதி உதவியை பெற இயலவில்லை.
அவர்கள் அனைவரும் உடனடியாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கினை தொடங்கி உதவித்தொகையை பெற இயலும். தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோ மெட்ரிக் எந்திரம் மூலம் விவசாயிகள் தங்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்னை மட்டும் பயன்படுத்தி விரல் ரேகை மூலம் சில நிமிடங்களில் வங்கி கணக்கினை தொடங்கி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.