புதுச்சேரி

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்.

பிளாஸ்டிக்குக்கு மாற்றாக பனை பொருட்கள்

Published On 2022-08-11 09:03 GMT   |   Update On 2022-08-11 09:03 GMT
  • பாண்டிச்சேரி ரோட்டரி சங்கத்தின் உதவியோடு 75 ஆயிரம் பனைவிதை நடும் விழா நடந்தது.
  • சமூக அமைப்பின் தலைவர் ஆனந்தன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுக்குப்பம் கடற்கரைப் பகுதியில், வனத்துறை மற்றும் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சமூக அமைப்பு இணைந்து பாண்டிச்சேரி ரோட்டரி சங்கத்தின் உதவியோடு 75 ஆயிரம் பனைவிதை நடும் விழா நடந்தது.

கவர்னர் தமிழிசை பனை விதை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வன காப்பாளர் சத்தியமூர்த்தி, துணை வனக்காப்பாளர் வஞ்சுள வள்ளி, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், வேளாண் அறிவியல் கல்லூரியின் தலைவர் கணேஷ், பாண்டிச்சேரி ரோட்டரி சங்கத் தலைவர் சாமி, தனசுந்தராம்பாள் சமூக அமைப்பின் தலைவர் ஆனந்தன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

பனை விதை வருங்காலத்தில் மிகப்பெரிய பொருளாதாரத்தை ஈட்டித் தரும். இயற்கையைப் பாதுகாக்கும். பனை என்பது கற்பக தரு. அதிலுள்ள பதநீர், பனங்கிழங்கு, பனம்பழம், ஓலைகள் பனை மரப் பொருட்களில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக சொல்கின்றனர். பனைமரப் பொருட்களை சாப்பிட்டு வந்தால் நோய் தொற்று ஏற்படாது என சொல்கின்றனர்.

அப்படிப்பட்ட பனை அழிந்து கொண்டே போகிறது. அதைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. அப்படி பலன் தரக்கூடியதை விட்டுவிட்டு செயற்கையாக போய்க் கொண்டிருக்கிறோம். பிளாஸ்டிக் இல்லாத புதுவையை நாம் உருவாக்கப் போகிறோம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனைப் பொருட்களைப் பயன் படுத்த முடியும்.

அதனால் பனையை விதைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 75 ஆயிரம் பனை விதைகளை விதைப்பதற்கான முயற்சி செய்துவரும் தனசுந்தராம்பாள் சமூக அமைப்பிற்கு எனது வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News