மார்க்சிஸ்டு கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்ட காட்சி.
மார்க்சிஸ்டு கட்சியினர் சாலைமறியல்
- ரேஷன் கடைகளை திறந்து தரமான இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு உட்பட அத்தியாவசிய பண்டங்களை வழங்க வேண்டும்.
- சிகப்பு குடும்ப அட்டை வழங்க வேண்டும்
புதுச்சேரி:
ரேஷன் கடைகளை திறந்து தரமான இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு உட்பட அத்தியாவசிய பண்டங்களை வழங்க வேண்டும். முறைசாரா தொழிலாளர்கள், நிரந்தர வருமானம் அற்றவர்கள் உட்பட தகுதி உள்ள அனை வருக்கும் சிகப்பு குடும்ப அட்டை வழங்க வேண்டும்.
நிறுத்தி வைக்கப்பட்ட இலவச அரிசிக்கு சிகப்பு அட்டைதாரர்களுக்கு ரூ.9 ஆயிரம், மஞ்சள் அட்டை உள்ளவர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். ரேஷன்கடை களில் தரமான அரிசி யாகவோ அல்லது பண மாகவோ தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியு றுத்தி புதுவை தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்டு பிரதேச செயலாளர் ராஜாங்கம் அறிவித்திருந்தார்.
இதன்படி காமராஜர் சாலை பாலாஜி திரையரங்கு அருகிலிருந்து மார்க்சிஸ்டு கட்சியின் ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்துக்கு பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார். அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசினார்.
முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி வாழ்த்தி பேசினார். முன்னாள் மத்திய குழு உறுப்பினர் சுதா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், கலியமூர்த்தி, தமிழ்ச்செல்வன்,பிரபுராஜ், சீனிவாசன், கொளஞ்சியப்பன், சத்தியா, இடைக்குழு செயலாளர்கள் மதிவாணன், ராம்ஜி, சரவணன், ராம மூர்த்தி, அன்புமணி உட்பட பலர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
ஊர்வலம் நேருவீதி வழியாக வந்த. போது மிஷன் வீதி சந்திப்பில் பேரிகார்டுகளை அமைத்து போலீசார் தடுத்தனர். ஊர்வலத்தில் வந்தவர்கள், ஜனநாயகரீதியில் போராட்டம் நடத்துகிறோம். தலைமை செயலகம் செல்ல அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் தலைமை செயலரை இங்கு அழைத்து வாருங்கள் என போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
தொடர்ந்து ஊர்வலத்தில் வந்தவர்கள் நேருவீதியில் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் நேருவீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாற்று வழிகளில் பொதுமக்கள் திரும்பிச்சென்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் அவர்களோடு சமாதானம் பேசி தலைமை செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்த மார்க்சிஸ்டு செயலாளர் ராஜாங்கம் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அழைத்து சென்றனர். இருப்பினும் மார்க்சிஸ்டு கட்சியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
போராட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன், இலவச அரிசி வழங்க கோரி பந்த் போராட்டம் நடத்த வேண்டும். அந்த போராட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மதசார்பற்ற அணிகளும் பங்கேற்க வேண்டும் என கூறினார்.