புதுச்சேரி

கோப்பு படம்.

ஓட்டல் ஊழியர் தூக்கு போட்டு சாவு

Published On 2022-10-01 05:40 GMT   |   Update On 2022-10-01 05:40 GMT
  • குயவர்பாளையத்தில் ஓட்டல் ஊழியர் தூக்கு போட்டு இறந்து போனார். இதனையறிந்த அவரது நண்பரும் வேதனையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இவர் கேட்டரிங் படித்து விட்டு புதுவை அண்ணா சாலையில் உள்ள ஒரு ரெசிடெண்சியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

புதுச்சேரி:

குயவர்பாளையத்தில் ஓட்டல் ஊழியர் தூக்கு போட்டு இறந்து போனார். இதனையறிந்த அவரது நண்பரும் வேதனையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுவை குயவர்பாளை யம் புது அய்யனார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பாலமுருகன் (வயது24). இவர் கேட்டரிங் படித்து விட்டு புதுவை அண்ணா சாலையில் உள்ள ஒரு ரெசிடெண்சியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

இதேபோல் கடலூர் தில்லைநாயகம் புரத்தை சேர்ந்த கார்த்திக்(25) என்பவர் புதுவை வண்ணான்குளத்தில் வாடகை வீட்டில் தங்கி ஓட்டலில் வேலை செய்து வந்தார். பாலமுருகனும், கார்த்திக்கும் நண்பர்கள் ஆவார்கள். அடிக்கடி கார்த்திக் வீட்டுக்கு வந்து பாலமுருகன் சாப்பிட்டு செல்வார்.

இந்த நிலையில் பாலமுருகன் அவரது வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த கார்த்திக் ஆஸ்பத்திரிக்கு சென்று நண்பரின் உடலை பார்த்து கதறி அழுதார்.

பின்னர் தான் தங்கியிருக்கும் வீட்டுக்கு வந்தார். அப்போது கார்த்திக் சோகத்துடன் இருந்ததால் பக்கத்து வீட்டில் வசிக்கும் கவுரி(51) என்பவர் கார்த்திக்கிடம் சோகத்துக்கான காரணத்தை கேட்டார். அதற்கு கார்த்திக் தான் உயிருக்கு உயிராக பழகிய நண்பர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி தேம்பிதேம்பி அழுதார். அவருக்கு கவுரி ஆறுதல் தெரிவித்து தூங்கினால் சோகம் குறையும் என்று சமாதானம் செய்து அவரை தூங்க வைத்து விட்டு கவுரி தன் வீட்டுக்கு சென்று தூங்கினார்.

இந்த நிலையில் கவுரி தூங்கி எழுந்த போது வீட்டின் வராண்டாவில் கார்த்திக் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். நண்பர் பிரிவை தாங்க முடியாமல் மனவேதனையில் கார்த்திக் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து கவுரி முதலியார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி கார்த்திக்கின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News