புதுச்சேரி

இந்தாண்டு முதல் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப்- புதுவை பட்ஜெட்டில் அறிவிப்பு

Published On 2022-08-22 05:55 GMT   |   Update On 2022-08-22 06:13 GMT
  • காரைக்கால் பிராந்தியத்தில் 24 மணி நேரமும் பால் விற்பனை செய்யப்படும்.
  • லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சக்கரை ஆலை தனியார் பங்களிப்புடன் மீண்டும் இயக்கப்படும்.

புதுவை சட்ட சபை இன்று கூடியது. நிதி பொறுப்பை வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகள் வருமாறு:-

புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடை, காலை சிற்றுண்டி, மதிய உணவு, கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் தொடரும்.

21 வயது முதல் 57 வயது வரை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். அரசின் எந்த உதவித்தொகையும் பெறாத குடும்ப பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

இந்தாண்டு முதல் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்.

ஏனாம் பிராந்தியத்தில் உள்ள டாக்டர் அப்துல்கலாம் அரசு கல்லூரியில் புதிய வகுப்புகள் தொடங்கப்படும் புதுவை லாஸ்பேட்டை அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லூரி, மகளிர் பொறியியல் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. புதுவையில் சட்ட பல்கலைக்கழகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்ட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தடையில்லா மின் விநியோகம் வழங்கப்படும். துணை மின் நிலையங்கள் புனரமைக்கப்படும். நலிவடைந்த கூட்டுறவு சங்கங்கள் மேம்படுத்தப்படும். லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சக்கரை ஆலை தனியார் பங்களிப்புடன் மீண்டும் இயக்கப்படும்.

காரைக்கால் பிராந்தியத்தில் 24 மணி நேரமும் பால் விற்பனை செய்யப்படும். கலைஞர்களுக்கு கலைமாமணி, தமிழ்மாமணி விருதுகள் வழங்கப்படும்.

புதுவையில் மேலும் 4 சுகாதார மையங்கள் அமைக்கப்படும். காரைக்காலில் புதிய மருத்துவ கல்லூரி அமைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News