புதுச்சேரி

அமைச்சர் நமச்சிவாயம்

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்- அமைச்சர் நமச்சிவாயம் உறுதி

Published On 2022-08-30 15:19 IST   |   Update On 2022-08-30 15:19:00 IST
  • போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. பிரதான சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
  • ஓட்டல் நிறுவன போர்டுகளை அகற்றினால் உடனடியாக சிபாரிசுக்கு வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-

நேரு(சுயேச்சை):- அரசு துறைகளில் வருவாயை பெருக்கவும், ஆக்கிரமிப்பு இடங்களை மீட்பது போன்ற அரசு நடவடிக்கையின்போது தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெறுகிறார்கள்.

இந்த தடை ஆணையை நீக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இந்த வழக்குகள் எத்தனை நிலுவையில் உள்ளது?

அமைச்சர் நமச்சிவாயம்: ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நேரு: போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. பிரதான சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். ஓட்டல் நிறுவன போர்டுகளை அகற்றினால் உடனடியாக சிபாரிசுக்கு வருகின்றனர். இதை மீறி ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்.

ஏ.கே.டி.ஆறுமுகம்(அரசு கொறடா): மேட்டுப்பாளையத்தில் டிராபிக் சிக்னல் வேலை செய்யவில்லை. போலீசாரும் இல்லை.

ரமேஷ்(என்ஆர்.காங்): போக்குவரத்து போலீசார் இருப்பதில்லை.

நமச்சிவாயம்: புதுவையில் 37 சிக்னல் அமைக்க உள்ளோம். நடைபாதை கடைகள் அதிகரித்துள்ளது. காலி செய்யும்போது போராட்டம் செய்கின்றனர். இதற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன. பல துறைகள் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

சிவசங்கர்(சுயே): தனி இடத்தில் நடை பாதை கடைகள் அமைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் தவறாக சாலையோரங்களில் கடைகள் அமைக்க அனுமதிக்கின்றனர். கடை வைப்பவர்களிடம் நகராட்சி அடிக்காசு வசூலிக்கிறது.

நமச்சிவாயம்: நகராட்சி அடிக்காசு குறிப்பிட்ட இடத்துக்குத்தான் வாங்குகின்றனர். அனைத்து இடங்களுக்கும் வாங்குவதில்லை.

கென்னடி(தி.மு.க.): பேனர்களை அதிகளவு வைக்கிறார்கள். அதை அகற்றுங்கள்.

சம்பத்(தி.மு.க.): சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றத்தை ஏன் நிறுத்தினீர்கள்?

நமச்சிவாயம்: உங்கள் ஒத்துழைப்பு தேவை. நீங்கள் யாரும் வராமல் போனால் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடலாம். மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags:    

Similar News