புஷ்கரணி விழா குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை
- புதுவை திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் புஷ்கரணி விழா நடைபெற உள்ளது.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி:
புதுவை திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் புஷ்கரணி விழா அடுத்த மாதம் 22-ந்தேதி தொடங்கி மே மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது.
இந்த விழாவினை சிறப்பாக நடத்த அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், அரசு செயலாளர்கள் உதயகுமார், ஜவகர், முத்தம்மா, போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆனந்த்மோகன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, போக்குவரத்து ஆணையர் சிவக்குமார், இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் புஷ்கரணி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.