செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம்
- அரியாங்குப்பத்தை அடுத்துள்ள வீராம்பட்டினம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது.
- இந்த கோவிலில் ஆடித் தேரோட்டம் கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புதுச்சேரி:
அரியாங்குப்பத்தை அடுத்துள்ள வீராம்பட்டினம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆடித் தேரோட்டம் கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை முன்னிட்டு தினசரி இரவு பல்வேறு வகையான அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நாளான (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது. தேரினை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், சம்பத், சிவசங்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த தேரோட்டத்திற்கு புதுவை, தமிழகப் பகுதியில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து கொண்டு இருக்கின்றனர்.
விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, போலீஸ் டி.ஜி.பி. மனோஜ்லால் மற்றும் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசித்தனர். தேரோட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
விழாவையொட்டி அரியாங்குப்பம் முதல் வீராம்பட்டினம் வரை தெருவெங்கும் பொதுமக்கள் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர், மக்கள் குழுவினர், விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் செய்து உள்ளனர்.