புதுச்சேரி

கோப்பு படம்.

தரமற்ற சாலைகள்: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்-முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2022-09-08 15:11 IST   |   Update On 2022-09-08 15:11:00 IST
  • புதுவை அரசின் பொதுப்பணித்துறையால் சமீபத்தில் ரூ.பல கோடியில் செப்பனிடப்பட்ட பல சாலைகள் மீண்டும் பழுதடைந்து வருகின்றன.
  • புதுவை-கடலூர் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறி உள்ளது. தவளக்குப்பத்தில் இருந்து கன்னியக் கோயில் வரை உள்ள சாலை மிக மோசமாக சேதமடைந்துள்ளது.

புதுச்சேரி:

புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசின் பொதுப்பணித்துறையால் சமீபத்தில் ரூ.பல கோடியில் செப்பனிடப்பட்ட பல சாலைகள் மீண்டும் பழுதடைந்து வருகின்றன.

புதுவை-கடலூர் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறி உள்ளது. தவளக்குப்பத்தில் இருந்து கன்னியக் கோயில் வரை உள்ள சாலை மிக மோசமாக சேதமடைந்துள்ளது.

சாலையின் பல இடங்களில் சிறிய, பெரிய பள்ளங்கள் உருவாகி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதைப்பற்றி அமைச்சர்களோ, அதிகாரி–களோ கவலைப்படாமல் உள்ளனர். 5 ஆண்டுக்கு தாங்க வேண்டிய 2 மாநிலங்களைஇணைக்கும் சாலை, 5 மாதங்களில் பழுதடைய காரணம் குறித்து கவர்னர் விளக்க வேண்டும்.

தரமற்ற பொருட்களால் சாலை அமைத்ததே இதற்கு காரணம். வரி பணத்தில் உருவாக்கப்படும் சாலை மக்களுக்கு உபயோகம் உள்ளதாக இருக்க வேண்டுமே தவிர அவர்களின் உயிரை காவு கொள்ளக் கூடியதாக இருக்கக் கூடாது.

சாலை போடும் பணியில் எந்த ஊழலும் நடைபெறவில்லை, சாலை தரமாகத்தான் போடப்பட்டது. சட்டப்படி சாலை அமைக்கப்பட்டது என முதல்-அமைச்சரும், பொதுப்பணித்துறை அமைச்சரும் மக்களுக்கு விளக்கம் அளிப்பார்களா?

சேதமடைந்த சாலை–களின் ஒப்பந்ததாரரை தகுதி நீக்கம் செய்யவும், பொறியாளர்களை சஸ்பெண்ட் செய்யவும் அரசு முன்வந்தால்தான் எதிர்காலத்தில் தரமான சாலைகள் அமைக்கப்படும். புதுவை அரசு இவ்விஷயத்தில் உண்மையைக் கண்டறிய சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News