புதுச்சேரி

கோப்பு படம்

கணவன்-மனைவி மீது தாக்குதல்

Published On 2022-06-16 10:45 IST   |   Update On 2022-06-16 10:45:00 IST
  • தவளக்குப்பத்தில் சொத்து தகராறில் கணவன்-மனைவி உள்பட 4 பேர் மீது தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • யே சந்திர சேகரன் மனைவி கவிதாவுக்கும் அவரது சகோதரர் பாஸ்கருக்கும் சொத்து பாகப்பிரிவினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது

புதுச்சேரி:

தவளக்குப்பத்தில் சொத்து தகராறில் கணவன்-மனைவி உள்பட 4 பேர் மீது தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தவளக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சந்திர சேகரன்(வயது36). இவர் தனது மாமனார் ஆறுமுகம் என்பவரது வீட்டில் தனது மனைவி மற்றும் அவரது சகோதர-சகோதரிகளோடு கூட்டு குடும்பமாக வசித்து வந்தார்.

இதற்கிடையே சந்திர சேகரன் மனைவி கவிதாவுக்கும் அவரது சகோதரர் பாஸ்கருக்கும் சொத்து பாகப்பிரிவினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

அடிக்கடி பாஸ்கர் தனது சகோதரி கவிதாவையும், அவரது கணவர் சந்திரசேகரனையும் வீட்டை காலி செய்யுமாறு தகராறு செய்து வந்தார்.

இந்த நிலையில் சந்திரசேகரன் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் உள்ளே நிறுத்த முயன்றார். அப்போது பாஸ்கரின் உறவினர்களான வேல்முருகன், கோபால், வேம்பு, ராஜலட்சுமி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி சந்திரசேகரனை தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

அதோடு சந்திர சேகரனின் மனைவி கவிதா, அவரது சகோதரி கீதா ஆகியோரையும் அந்த கும்பல் இரும்பு கம்பியால் தாக்கியது.

இந்த தாக்குதலில் காயமடைந்த சந்திரசேகரன், அவரது மனைவி கவிதா மற்றும் இவரது சகோதரிகள் கலைவாணி, கீதா ஆகியோர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

பின்னர் இதுகுறித்து சந்திரசேகரன் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News