2 குழந்தைகள், மனைவியை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை
- அரியாங்குப்பத்தில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் தபால்காரர் வீதி செட்டிக்குளம் அருகே உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.
புதுச்சேரி:
அரியாங்குப்பத்தில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுவை பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது38). ஆட்டோ டிரைவர். இவர் தனது மனைவி பச்சைவாழி(34) மற்றும் மகள் லட்சுமி தேவி(7) மகன் ஆகாஷ்(3) ஆகியோருடன் அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் தபால்காரர் வீதி செட்டிக்குளம் அருகே உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.
இதற்கிடையே தியாகராஜனுக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சுமார் ரூ.18 லட்சம் வரை அவருக்கு கடன் இருந்ததாக தெரிகிறது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொடர்ந்து தியாகராஜனுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.
இதனால் மனமுடைந்த தியாகராஜன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து அவர்கள் 3 பேரையும் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தானும் தூக்கில் தொங்கினார்.
வெகு நேரமாக தியாகராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.
அப்போது தியாகராஜன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அரியாங்குப்பத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மனைவி-குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த தியாகராஜன் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் நெருங்கிய உறவினர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.