வழிபாடு
அருணாசலேஸ்வரர் கோவிலில் நடராஜர் -சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்த காட்சி.

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்: மகா தீப ‘மை’ பக்தர்களுக்கு விநியோகம்

Published On 2021-12-20 13:31 IST   |   Update On 2021-12-20 13:31:00 IST
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மகா தீப கொப்பரையிலிருந்து சேமிக்கப்பட்ட தீப மை நடராஜருக்கு திலகமிட்டு பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு மாணிக்கவாசகர் உற்சவம் நடைபெற்று வந்தது.

இதன் நிறைவாக நேற்று மாலை நடராஜர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சுவாமி - அம்மன் புறப்பாடு ஆகியவை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து கோவில் ராஜ கோபுரம் அருகில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் இன்று அதிகாலை நடராஜர் -சிவகாமி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அதன்பின்னர் ராகுகாலம் தொடங்கியதால் 7.30 முதல் 9 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்ற ஆருத்ரா சிறப்பு வழிபாடுகள் நிறுத்தப்பட்டது.ஆயிரங்கால் மண்டபத்தின் நடை மூடப்பட்டது.

இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.அப்போது சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதனால் தொடர்ந்து நடைபெறும் அலங்கார தீபாராதனையை காண உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஆயிரங்கால் மண்டபம் முன்பு 9மணிவரை காத்திருந்தனர். ஏராளமான.போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் 9 மணிக்கு மீண்டும் ஆயிரங்கால் மண்டபத்தின் நடை திறக்கப்பட்டு நடராஜர் -சிவகாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாரதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளின் போது மாணிக்கவாசகர் பாடல்கள் ஓதுவார்கள் மூலம் பாடப்பட்டது.

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மகா தீப கொப்பரையிலிருந்து சேமிக்கப்பட்ட தீப மை நடராஜருக்கு திலகமிட்டு பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

அங்கு வழிபாடுகள் நிறைவு பெற்றதும் நடராஜர் சிவகாமியம்மன் நடனமாடி வரும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. அப்போது பஞ்ச வாத்தியங்கள் முழங்க பட்டன.

பின்னர் திருமஞ்சன கோபுரம் வழியாக நடராஜர் -சிவகாமி அம்மன் மாணிக்கவாசகர் மாட வீதியில் உலா வந்தனர்.அங்கு திரண்ட பக்தர்கள் சுவாமி -அம்மனுக்கு புத்தாடைகள் வழங்கியும், அர்ச்சனை செய்தும் வழிபாடு செய்தனர்.

Similar News