செய்திகள்

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு அபிஷேகம்

Published On 2017-12-29 03:27 GMT   |   Update On 2017-12-29 03:28 GMT
வடபழனி முருகன் கோவிலில் ஆங்கிலப்புத்தாண்டு பிறப்பையொட்டி ஜனவரி 1-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
கோவில் உதவி ஆணையர் ச.சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆங்கிலப்புத்தாண்டு பிறப்பையொட்டி ஜனவரி 1-ந் தேதி (திங்கட்கிழமை) சென்னை வடபழனி முருகன் கோவிலில் மூலவருக்கு அதிகாலை 3 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்ந்து தரிசனம் செய்வதற்காக கோவில் திறந்து வைக்கப்படுகிறது.

அதிகாலை 4 மணி முதல் பகல் 12 மணி வரை வெள்ளி நாணய கவச அலங்காரமும், பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை தங்க கவச அலங்காரமும், மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை சந்தனகாப்பு, புஷ்ப அங்கி அலங்காரமும் நடைபெற உள்ளது.

பக்தர்கள் வசதியாக தரிசனம் செய்யவும், அர்ச்சனை செய்யவும், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக பழனி முருகன் கோவில் தெருவில் உள்ள தெற்கு கோபுர வாசலில் 2 வகை வரிசைகள் கட்டப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனம் முடிந்து விரைவாக வெளியேற வசதியாக மேற்கு கோபுர வாசல் திறக்கப்பட உள்ளது.

சென்னை மாநகர காவல் துறையினரால் பாதுகாப்பு வசதியும், சென்னை பெருநகர் குடிநீர் வாரியத்தால் குடிநீர் வசதியும், சென்னை மாநகராட்சியால் சுகாதார வசதியும் செய்ய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News