உலகம்

அமெரிக்கா: கண்டெய்னர் லாரிக்குள் இருந்து 40 சடலங்கள் மீட்பு

Published On 2022-06-28 03:22 GMT   |   Update On 2022-06-28 04:47 GMT
  • கண்டெயினரில் 50-க்கும் அதிகமானோர் மயக்கமடைந்த நிலையில் கிடைந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
  • உயிருக்கு ஆபத்தான நிலையில் 16 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

வாஷிங்டன் :

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சண்டியாகோ புறநகர் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லாரி நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அந்த லாரியின் கண்டெய்னரை திறந்து பார்த்தனர்.

அப்போது, அந்த கண்டெயினரில் 50-க்கும் அதிகமானோர் மயக்கமடைந்த நிலையில் கிடைந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்களை பரிசோதனை செய்ததில் கண்டெய்னர் 40 பேர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் 16 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடியேற அகதிகள் கண்டெய்னர் லாரியில் வந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், டெக்சாஸ் நகருக்கு வந்த பின்னர் வேறு எங்கு செல்வது என தெரியாமல் லாரியை ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பிசென்றதால் கண்டெய்னரில் இருந்த அகதிகள் அதீத வெப்பம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News