உலகம்

உக்ரைனுக்கு வழங்க இனி நிதி இல்லை - லாயிட் ஆஸ்டின்

Published On 2024-01-24 09:49 GMT   |   Update On 2024-01-24 09:49 GMT
  • அமெரிக்க அரசாங்கம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது
  • ஐரோப்பிய நாடுகளை உக்ரைனுக்கு உதவ கேட்டு கொண்டார் ஆஸ்டின்

2022 பிப்ரவரி மாதம், உக்ரைனை "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ரஷியா ஆக்கிரமித்ததை அடுத்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது.

இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதம் மற்றும் கட்டிட சேதங்கள் நடந்து, போர் தொடங்கி அடுத்த மாதத்துடன் 2 வருடங்கள் ஆக உள்ள நிலையிலும், போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த டிசம்பர் 27 அன்று அமெரிக்கா சுமார் $250 மில்லியன் அளவிற்கு நிதியுதவியும், ராணுவ அதி நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் உக்ரைனுக்கு வழங்கி உதவியது.

அமெரிக்க அரசாங்கம் பெரும் நிதி நெருக்கடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனிடம் தற்போது ராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாடங்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது.

நேற்று ரஷியா, உக்ரைனின் கீவ் மற்றும் கார்கீவ் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர்; பல கட்டிடங்கள் சேதம் அடைந்தன.


இந்நிலையில், நேற்று அமெரிக்காவில், உக்ரைனை ஆதரிக்கும் சுமார் 50 நாடுகளின் பிரதிநிதிகளுடனான மாதாந்திர சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

2022ல் இந்த கூட்டமைப்பை அமெரிக்க ராணுவ தலைமை அதிகாரி லாயிட் ஆஸ்டின் (70) உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்டு உடல்நலம் தேறி வரும் ஆஸ்டின், தனது வீட்டில் இருந்தபடியே "வீடியோ கான்ஃப்ரன்சிங்" வழியாக இச்சந்திப்பில் பங்கேற்றார்.

அப்போது அவர் கூட்டமைப்பில் உள்ள நாடுகளிடம், "போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்காவால் இனி நிதியுதவி அளிக்க இயலாது. உக்ரைனுக்கு உயிர் காக்கும் ராணுவ வான்வழி தாக்குதலுக்கான உயர் தொழில்நுட்ப உபகரணங்களை தந்து உதவவும், நிதியுதவி வழங்கவும் ஐரோப்பிய நட்பு நாடுகளை கேட்டு கொள்கிறேன்" என தனது உரையின் தொடக்கத்திலேயே தெரிவித்தார்.

அமெரிக்க உதவி கேள்விக்குறி ஆனதால், ஐரோப்பிய நாடுகள் அடுத்து என்ன செய்ய போகின்றன என உக்ரைன் எதிர்பார்த்து காத்து நிற்கிறது.

Tags:    

Similar News