உலகம்

உக்ரைன் குழந்தைகள் 31 பேர் மீட்பு: எலி-கரப்பான் பூச்சிகள் இருந்த அறையில் வாழ்ந்ததாக கதறல்

Published On 2023-04-09 11:55 IST   |   Update On 2023-04-09 11:55:00 IST
  • உக்ரைன் குழந்தைகள் கடத்தப்படவில்லை என்றும் அவர்களது சொந்த பாதுகாப்புக்காக கொண்டு செல்லப்பட்டனர் என்றும் ரஷியா தெரிவித்தது.
  • குழந்தைகள் மீட்பு பணியை சேவ் உக்ரைன் மனிதாபிமான அமைப்பு செய்து வருகிறது.

கிவ்:

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனில் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின.

போரின் போது ரஷிய படைகள் பிடித்த பகுதிகளில் இருந்த மக்கள் ரஷியா மற்றும் கிரிமியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். ஏராளமான குழந்தைகள் அவர்களது பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டனர்.

சுமார் 19,500 குழந்தைகள் ரஷியா அல்லது ரஷியா ஆக்கிரமிப்பு கிரிமியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் குழந்தைகள் கடத்தப்படவில்லை என்றும் அவர்களது சொந்த பாதுகாப்புக்காக கொண்டு செல்லப்பட்டனர் என்றும் ரஷியா தெரிவித்தது.

ரஷியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட உக்ரைனின் சிறுவர்-சிறுமிகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக உக்ரைனை சேர்ந்த 31 சிறுவர்-சிறுமிகள் மீண்டும் பெற்றோருடன் இணைந்தனர்.

இவர்கள் கார்கில் மற்றும் கெர்சன் பகுதிகளில் இருந்து ரஷியாவுக்கு அழைத்து செல்லப்பட்டு இருந்தனர். 31 பேரும், உக்ரைன்-பெலாரஸ் எல்லை வழியாக சொந்த நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது தங்கள் பெற்றோரை கட்டியணைத்து அழுதனர்.

மீட்கப்பட்ட சிறுவர்கள் கூறும்போது, நாங்கள் தத்தெடுக்கப்படுவோம். எங்களுக்கு பாதுகாவலர்கள் கிடைப்பார்கள் என்று ரஷிய அதிகாரிகள் கூறினார்கள். இங்கு நீண்ட காலம் இருப்போம் என்று அவர்கள் சொன்ன போது அழ ஆரம்பித்தோம்.

நாங்கள் தங்க வைக்கப்பட்ட முகாம்களில் எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் இருந்தன. அவைகளுடன்தான் நாங்கள் இருந்தோம் என்றனர். குழந்தைகள் மீட்பு பணியை சேவ் உக்ரைன் மனிதாபிமான அமைப்பு செய்து வருகிறது.

Tags:    

Similar News