100 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு... துருக்கியின் 10 மாகாணங்களில் 3 மாதத்திற்கு அவசர நிலை பிரகடனம்
- நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகும்.
- தொலைதூர பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வது கடும் சவாலாக உள்ளது.
இஸ்தான்புல்:
துருக்கி-சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000ஐ தாண்டி உள்ளது. மீட்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தோண்டத் தோண்ட சடலங்கள் கிடைத்தவண்ணம் உள்ளது. உயிரிழப்பு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது.
சிரியாவிற்கு அருகிலுள்ள தொலைதூர பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வது கடும் சவாலாக உள்ளது. பனிப்பொழிவால் சில சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் உதவிப்பொருட்களை விரைவாக கொண்டு செல்ல முடியவில்லை.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகும். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 தென்கிழக்கு மாகாணங்களில் 3 மாதங்களுக்கு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார் அதிபர் தாயிப் எர்டோகன். மீட்பு பணிகளை விரைந்து முடிப்பதற்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறி உள்ளார்.
100 ஆண்டுகளில் இல்லாத அளவில் நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், எர்டோகனின் அரசாங்கம் மிகவும் மந்தமாக பணி செய்வதாக சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். எனவே, எர்டோகன் அதிரடியாக அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.