உலகம்

உணவு பொருட்கள் பற்றாக்குறை: விவசாய பணியில் களம் இறங்கிய இலங்கை ராணுவ வீரர்கள்

Published On 2022-06-19 09:26 GMT   |   Update On 2022-06-19 09:26 GMT
  • உணவு பொருட்கள் உற்பத்தியை தீவிரபடுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
  • 1500 ஏக்கர் அரசு தரிசு நிலங்களில் இலங்கை ராணுவ வீரர்கள் விவசாய பணிகளை மேற்கொள்கிறார்கள்.

கொழும்பு:-

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் உணவு பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. வரலாறு காணாத வகையில் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

அந்நிய செலாவணி இருப்பு இல்லாததால் இறக்குமதி செய்ய முடியவில்லை. இதனால் இலங்கையில் வருகிற செப்டம்பர் மாதத்தில் கடும் உணவு பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது.

இதையடுத்து உணவு பொருட்கள் உற்பத்தியை தீவிரபடுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதில் விவசாய பணியில் ராணுவ வீரர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக பசுமை விவசாய வழிகாட்டல் குழுவை ராணுவம் உருவாக்கியது. முதல் கட்டமாக விவசாய நிபுணர்களுடன் கலந்தாலோசித்து நிலங்களை தேர்வு செய்து விதைகளை பயிரிடுவதற்கு களை யெடுத்தல், உழுதல் போன்ற பணிகளை தொடங்குகிறார்கள்.

1500 ஏக்கர் அரசு தரிசு நிலங்களில் இலங்கை ராணுவ வீரர்கள் விவசாய பணிகளை மேற்கொள்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள அனைத்து பாதுகாப்பு படை தலைமையகங்களும், அமைப்புகளும் விவசாய பணியில் களம் இறங்கி உள்ளன.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, நாட்டில் தரிசாக உள்ள 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை விளை நிலங்களாக மாற்றி உணவு தானிய உற்பத்தியை பெருக்கி எதிர்காலத்தில் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்து கொள்ளும் இயக்கத்தில் ராணுவம் பங்கேற்கும். உணவு பாதுகாப்பு திட்டங்களை மேம்படுத்துவதற்கு பசுமை விவசாய வழிகாட்டும் குழுவை ராணுவம் அமைத்துள்ளது என்றார்.

இந்த நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறும் போது, உணவு நெருக்கடியால் 40 லட்சம் முதல் 50 லட்சம் பேர் வரை நேரடியாக பாதிக்கப்படுவார்கள். உணவு பாதுகாப்பு திட்டங்களுக்கு அனைத்து எம்.பி.க்களும் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News