உலகம்

தென்கொரியாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து- 7 பேர் பலி

Published On 2022-09-27 04:35 GMT   |   Update On 2022-09-27 04:35 GMT
  • தீ விபத்தில் வணிக வளாகத்தில் நிறுத்தி வைத்து இருந்த வாகனங்கள் எரிந்து சேதம் ஆனது.
  • பணியில் இருந்த 7 தொழிலாளர்கள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர்.

சியோல்:

தென்கொரியா தலைநகர் சியோலில் இருந்து 160 கிலோ மீட்டர் தூரத்தில் டோஜியோன் நகரம் உள்ளது. இங்குள்ள ஒரு வணிக வளாகத்தின் கீழ் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்தது. வணிக வளாகம் முழுவதும் தீ பரவியது.

இதுபற்றி அறிந்ததும் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் வணிக வளாகத்தில் நிறுத்தி வைத்து இருந்த வாகனங்கள் எரிந்து சேதம் ஆனது. மேலும் அங்கு பணியில் இருந்த 7 தொழிலாளர்கள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர்.

தீ விபத்து ஏற்பட்டதும் வணிக வளாகம் அருகில் வசித்து வந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக இரவு நேரம் இந்த தீ விபத்து நடந்ததால் பொதுமக்கள் யாரும் இல்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News