உலகம்

ரஷியாவில் 3 பேரை சுட்டுக்கொன்று விட்டு முதியவர் தற்கொலை

Published On 2022-11-25 05:21 GMT   |   Update On 2022-11-25 05:21 GMT
  • முதியவர் பொதுமக்களை துப்பாக்கியால் சுடும்காட்சி கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.
  • கேமிராவில் பதிவான கண்காணிப்பு காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மாஸ்கோ:

ரஷியாவின் தெற்கு பகுதியான கிரிம்ஸ்க் நகரில் நேற்று 66 வயது முதியவர் ஒருவர் திடீரென தான் கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டார்.

அவர் ரோட்டோரம் நடந்து கொண்டே இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டார். அவரது இந்த வெறிச்செயலை பார்த்த பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர்.

முதியவர் சுட்டதில் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 61 வயது முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார். 3 பேரை சுட்டுக்கொன்ற பிறகு கொலையாளியும் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதர் யார்? என்று தெரியவில்லை. எதற்காக அவர் இந்த செயலில் ஈடுபட்டார் என்பதும் மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் பொதுமக்களை துப்பாக்கியால் சுடும்காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சி தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதில் முதியவர் நடந்து கொண்டே துப்பாக்கியால் சுடுவதும் சிலரை பக்கத்தில் இருந்து சுட்டுக்கொன்ற காட்சிகளும் உள்ளன. இந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News