உலகம்

இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்சே

Published On 2022-07-14 14:26 GMT   |   Update On 2022-07-14 14:26 GMT
  • நாட்டை விட்டு சென்ற கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை இடைக்கால அதிபராக நியமித்தார்.
  • மாலத்தீவில் கோத்தபயவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார்.

கொழும்பு:

முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்தது. அதிபர் பதவி விலக வேண்டும் என தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே, நாட்டைவிட்டு தப்பிச் சென்றார். ஆனால் அவர் ராஜினாமா செய்யவில்லை. 13ம் தேதி ராஜினாமா செய்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மாலத்தீவு சென்ற அவர் அங்கிருந்தபடி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை இடைக்கால அதிபராக நியமித்தார். அவருக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில், அவசர நிலையை பிரகடனம் செய்தார் ரணில்.

இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மகிந்த யாப்பாவுக்கு இ-மெயில் மூலம் அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே மாலத்தீவில் கோத்தபயவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார். மாலத்தீவில் இருந்து தனிப்பட்ட பயணமாக அவர் சிங்கப்பூரில் நுழைய அனுமதித்துள்ளதாகவும், அவர் அடைக்கலம் கோரவில்லை என்றும் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News