பொருளாதார நெருக்கடி: ராணுவத்தை மூன்றில் ஒரு பங்காக குறைக்கிறது இலங்கை
- 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 539 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
- நன்கு சமநிலையான பாதுகாப்புப் படையை உருவாக்குவதே அரசின் நோக்கமாகும்.
கொழும்பு:
கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில், ராணுவத்தை மூன்றில் ஒரு பங்காக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இலங்கை பாதுகாப்புத்துறை மந்திரி பிரேமிதா பண்டார தென்னகோன் கூறியதாவது:-
இலங்கையின் ராணுவ பலம் தற்போது 200,783 ஆக உள்ளது. இதை மூன்றில் ஒரு பங்காக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் ராணுவ பலத்தை 1,35,000 ஆகவும், 2030க்குள் 1,00,000 ஆகவும் குறைக்கப்படும்.
வரவிருக்கும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் 2030ஆம் ஆண்டிற்குள் தொழில்நுட்ப ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் நன்கு சமநிலையான பாதுகாப்புப் படையை உருவாக்குவதே அரசின் நோக்கமாகும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 539 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்தது விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.