இலங்கையில் சட்டம்- ஒழுங்கை மீட்க ராணுவத்துக்கு உத்தரவிட்ட ரணில்
- அதிபர் மாளிகை, பிரதமர் மாளிகை மற்றும் அரசு அலுவலகங்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர்
- நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை கோத்தபய நியமித்துள்ளார்.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். அதேசமயம், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வலியுறுத்தியும் போராட்டம் தொடர்கிறது. அதிபர் மாளிகை, பிரதமர் மாளிகை மற்றும் அரசு அலுவலகங்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றிய நிலையில், நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார் ரணில்.
இதற்கிடையே நாட்டை விட்டு தப்பிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை நியமித்துள்ளார். எனினும் மக்கள் போராட்டம் தொடர்கிறது.
இந்நிலையில், தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய ரணில் விக்ரமசிங்கே, இலங்கையில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க ராணுவம் மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். நிலைமையை சரிசெய்வதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அந்த நடவடிக்கையை எடுக்கலாம் என்று அவர் கூறியிருக்கிறார்.