உலகம்

அபேயின் அரசியல் நடவடிக்கை பிடிக்காததால் சுட்டேன்- பிடிபட்ட கொலையாளி பரபரப்பு தகவல்

Published On 2022-07-09 06:49 GMT   |   Update On 2022-07-09 06:49 GMT
  • கூட்டத்தில் ஷின்சோ அபே பேச தொடங்கிய சில நிமிடங்களில் டெட்சுயா யமகாமி அவரை துப்பாக்கியால் சுட்டார்.
  • ஷின்சோ அபேயின் கழுத்தில் வலது பகுதி மற்றும் வலது இதயப்பகுதியில் குண்டு பாய்ந்திருந்தது.

டோக்கியோ:

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நேற்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியபோது சுட்டு கொல்லப்பட்டார்.

ஜப்பானின் கிழக்கு நகரமான நாராவில் நடந்த தெருமுனை கூட்டத்தில் பேச தொடங்கியதும் அவர் சுடப்பட்டார். வீடியோ காட்சிகளில் ஷின்சோ அபேயின் பின்புறம் அப்பாவி போல நின்ற வாலிபர் துப்பாக்கியால் சுடுவது பதிவாகி இருந்தது.

அவரை பாதுகாப்பு வீரர்கள் பாய்ந்து பிடித்தனர். விசாரணையில் அவர் டெட்சுயா யமகாமி (வயது 41) ஜப்பான் கடல் சார் தற்காப்பு படை என்ற கடற்படை பிரிவில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்தவர் என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன்விபரம் வருமாறு:-

தேர்தல் பிரசாரத்துக்கு ஷின்சோ அபே கிழக்கு ஜப்பானின் நாரா நகருக்கு வர இருப்பது ஆன்லைனில் வெளியிடப்பட்டிருந்தது. இதனை கொலையாளி டெட்சுயா யமகாமி பார்த்துள்ளார்.

அதில் ஷின்சோ அபே நாராவில் எங்கெங்கு பேசுகிறார் என்பதை கண்டுபிடித்த டெட்சுயா யமகாமி, அந்த பகுதிகளில் பாதுகாப்பு குறைவாக இருக்கும் பகுதிகளை குறிப்பெடுத்துள்ளார்.

இதில் நாரா பகுதியில் நடக்கும் தெருமுனை கூட்டத்தில் குறைவான பாதுகாப்பு இருக்கும் என்பதை தெரிந்துகொண்ட கொலையாளி டெட்சுயா யமகாமி, அந்த பகுதியில் ஷின்சோ அபேயை சுட்டு கொல்ல முடிவு செய்துள்ளார்.

இதற்காக அவரே வீட்டில் சுயமாக இரட்டை குழல் துப்பாக்கியை தயாரித்து உள்ளார். அந்த துப்பாக்கியை தனது சட்டையில் மறைத்து வைத்தபடி கூட்டத்துக்கு சென்றுள்ளார்

கூட்டத்தில் ஷின்சோ அபே பேச தொடங்கிய சில நிமிடங்களில் டெட்சுயா யமகாமி அவரை துப்பாக்கியால் சுட்டார். 2 முறை சுட்டதில் ஷின்சோ அபே ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார்.

ஷின்சோ அபேயின் கழுத்தில் வலது பகுதி மற்றும் வலது இதயப்பகுதியில் குண்டு பாய்ந்திருந்தது. அவரை பாதுகாவலர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 100 யூனிட் ரத்தம் கொடுத்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் பரிதாபமாக இறந்தார்.

ஷின்சோ அபேயை கொன்றது ஏன்? என்பது பற்றி கொலையாளி டெட்சுயா யமகாமி கூறும்போது, ஷின்சோ அபேயின் அரசியல் எனக்கு பிடிக்கவில்லை. அவர் மீது அரசியலுக்கு தொடர்பில்லாத பல புகார்கள் இருந்தன.

அவர் பலமுறை இதுபோன்ற தவறுகளை செய்திருந்தார். இதற்காக அவரை கொல்ல முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஜப்பான் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News