உலகம்

மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹாரி பங்கேற்கிறார் - பக்கிங்ஹாம் அரண்மனை தகவல்

Published On 2023-04-12 14:44 GMT   |   Update On 2023-04-12 14:44 GMT
  • இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறவுள்ளது.
  • இந்தக் கோலாகலத்தை காண ஒட்டுமொத்த இங்கிலாந்தும் தயாராகி வருகிறது.

லண்டன்:

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின், அவரது மகன் சார்லஸ் மன்னராக அரியணை ஏறியபோதும், அதிகாரபூர்வ முடிசூட்டு விழா பல மாதங்களாக நடைபெறாமலே இருந்து வந்தது.

மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா அடுத்த மாதம் (மே) 6-ம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 1953-ம் ஆண்டு மறைந்த ராணி 2-ம் எலிசபெத்தின் முடிசூட்டு விழா நடந்தது. அதனை தொடர்ந்து 70 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த பாரம்பரிய விழா நடைபெற இருக்கிறது. இந்தக் கோலாகலத்தை காண ஒட்டுமொத்த இங்கிலாந்தும் தயாராகி வருகிறது.

சார்லசின் முடிசூட்டு விழாவுக்காக இங்கிலாந்து மன்னர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த 700 ஆண்டுகள் பழைமையான தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனம் தயார்படுத்தப்பட்டிருக்கிறது. மன்னர் 3-ம் சார்லஸ் பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல் ஏந்தி அந்த சிம்மாசனத்தில் அமர்வார். அதை தொடர்ந்து, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு மன்னர் ஆசீர்வதிக்கப்படுவார். அதன்பிறகு, புனித எட்வர்டின் கிரீடம் மன்னர் 3-ம் சார்லசுக்கு சூட்டப்படும்.

மேலும், பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து கொண்டு, நாட்டு மக்களுக்கு புதிய மன்னர் சார்லஸ் உரையாற்றுவார். அன்றைய தினமே மன்னர் சார்லசின் மனைவியான கமிலாவும் இங்கிலாந்து ராணியாக முறைப்படி அறிவிக்கப்படுவார்.

இதற்கிடையே, மன்னரின் முடிசூட்டு விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்தது.

இந்நிலையில், இளவரசர் ஹாரி, மே 6-ம் தேதி தனது தந்தை 3-ம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News