உலகம்

முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை: கத்தார் நீதிமன்றம் தீர்ப்பு

Published On 2023-10-26 13:04 GMT   |   Update On 2023-10-26 13:04 GMT
  • 8 அதிகாரிகளும் பல போர் கப்பல்களுக்கு தலைமை தாங்கியவர்கள்
  • பல முறை ஜாமீன் மறுக்கப்பட்டு சிறைவாசம் நீட்டிக்கப்பட்டது

இந்திய கடற்படை போர்கப்பல்களுக்கு தலைமை தாங்கி, உயர் பதவி வகித்த, கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் புமேந்து திவாரி, கமாண்டர் சுகுணாகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா மற்றும் அதிகாரி ராகேஷ் எனும் 8 முன்னாள் கடற்படை அதிகாரிகள், அரபு நாடான கத்தாரின் தலைநகர் தோஹாவில், டஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் (Dahra Global Technologies) எனும் நிறுவனத்தில் பணியாற்ற சென்றனர்.

இவர்கள் 8 பேரும் இத்தாலிய தொழில்நுட்பத்தில் உருவாகும், மறைந்திருந்து தாக்க கூடிய அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களின் செயல்பாடுகள் குறித்த செயல்பாட்டில் அந்நிறுவனத்தில் முக்கிய பங்காற்றி வந்தனர்.

கடந்த 2022 ஆகஸ்ட் மாதம், கத்தார் அரசாங்கம் இவர்களை சிறையில் அடைத்தது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து சரிவர தகவல்கள் இல்லாமலிருந்தது. இவர்களின் ஜாமின் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டு அவர்கள் சிறைவாசம் நீட்டிக்கப்பட்டு கொண்டே சென்றது.

கடந்த மார்ச் 2023ல் இவர்கள் மீதான வழக்கு விசாரணை துவங்கியது.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு இவர்களுக்கு கத்தார் நீதிமன்றம் தற்போது மரண தண்டனை விதித்துள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அதில் அத்துறை தெரிவித்திருப்பதாவது:

நாங்கள் இந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம். தீர்ப்பின் முழு விவரங்களும் கிடைத்ததும் கத்தார் அதிகாரிகளுடன் இது குறித்து பேச உள்ளோம். இந்த வழக்கிற்கு தீவிர முக்கியத்துவம் வழங்கியதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளோம். சட்டதிட்டங்களின்படி அவர்களை வெளியே கொண்டு வருவதற்கான வழிமுறைகளை ஆராய்த்து வருகிறோம்.

இவ்வாறு வெளியுறவு துறை தெரிவித்திருக்கிறது.

கடந்த ஜூன் 8 அன்றே இந்த 8 பேரில் ஒரு அதிகாரியின் சகோதரி, இவ்விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அவசர தலையீட்டை கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News