உலகம்

இந்தியாவைப் பற்றி சீனாவில் முகமது யூனுஸ் பரபரப்பு கருத்து.. வலுக்கும் கண்டனம்!

Published On 2025-04-01 13:54 IST   |   Update On 2025-04-01 13:54:00 IST
  • இந்தியாவில் வடகிழக்கில் ஏழு மாநிலங்கள் உள்ளன, அவை '7 சகோதரிகள்' என்று அழைக்கப்படுகின்றன
  • இதன்மூலம் வங்கதேசம் வழியாக சீனா தனது பொருளாதாரத்தை விரிவுபடுத்த யூனுஸ் அழைப்பு விடுத்தார்.

வங்கதேசத்தில் அதிகரித்து வரும் அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் சீனாவிற்கு 4 நாள் பயணம் மேற்கொண்டார். சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த யூனுஸ்  இரு நாடு உறவுகளை பற்றி விவாதித்தார்.

இந்நிலையில் நேற்று சீனாவில் நடந்த கூட்டத்தில் பேசிய யூனுஸ், "இந்தியாவில் வடகிழக்கில் ஏழு மாநிலங்கள் உள்ளன, அவை '7 சகோதரிகள்' என்று அழைக்கப்படுகின்றன (அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மற்றும் மிசோரம்).

இந்த ஏழு மாநிலங்களும் இந்தியாவின் நிலத்தால் சூழப்பட்ட பகுதி. அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் கடலை அடைய எந்த வழியும் இல்லை, இந்த பிராந்தியத்தில் வங்கதேசம்தான் "கடலின் ஒரே பாதுகாவலர்" என்று தெரிவித்தார். இதன்மூலம் வங்கதேசம் வழியாக சீனா தனது பொருளாதாரத்தை விரிவுபடுத்த யூனுஸ் அழைப்பு விடுத்தார்.

 சீனாவில் முகமது யூனுஸ் இந்தியாவை பற்றி பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. வடகிழக்கு மாநில தலைவர்கள் மற்றும் அமைப்புகளும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினரும் பொருளாதார நிபுணரான சஞ்சீவ் சன்யால் இதுபற்றி பேசும்போது, வங்கதேசத்தில் முதலீடு செய்ய சீனாவுக்கு வரவேற்பு தெரிவிக்கும்போது, 7 இந்திய மாநிலங்களின் நிலப்பரப்பு பற்றி பேசுவதற்கான முக்கியத்துவம் என்ன? என்று கேள்வி எழுப்பினார். 

Tags:    

Similar News