உலகம்

தொடரும் லே ஆஃப்கள்: 2500 ஊழியர்களை நீக்கும் பன்னாட்டு நிறுவனம்

Published On 2024-01-31 16:19 IST   |   Update On 2024-01-31 16:19:00 IST
  • கலிபோர்னியாவில் 1998ல் தொடங்கப்பட்ட பேபால், பன்னாட்டு நிறுவனமாக வளர்ந்தது
  • நிறுவனத்தை அதன் சரியான அளவில் நிலைநிறுத்துகிறோம் என்றார் க்ரிஸ்

இணையதள வழியாக பண பரிமாற்றங்களை அனுமதிக்கும் நாடுகளில், பயனர்களுக்கு பண பரிமாற்ற செயலி மூலம் சேவைகளை வழங்கி வரும் பிரபல நிறுவனம், பேபால் (PayPal).

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 1998ல் தொடங்கப்பட்ட பேபால், ஒரு பன்னாட்டு நிறுவனமாகும்.

இந்தியாவிலும் பேபால் நிறுவனத்திற்கு சென்னை, பெங்களூரூ மற்றும் ஐதராபாத் நகரில் கிளைகள் உள்ளன.

பேபாலின் தலைமை செயல் அதிகாரி (CEO) அலெக்ஸ் க்ரிஸ் (Alex Chriss) ஊழியர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

இன்று மிக சங்கடமான ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன்.

உலகளாவிய நமது ஊழியர்களின் எண்ணிக்கை 9 சதவீதம் குறைக்கப்பட உள்ளது.

சில ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியும், சில காலியிடங்களை நீக்கியும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

நமது வர்த்தகத்தை சரியான அளவில் சரியான வேகத்தில் கொண்டு சென்று பயனர்களுக்கு அவர்கள் எதிர்பார்ப்பதை அளித்து வருவாயை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதே நேரத்தில் நமது வணிகத்தில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் இடங்களில் முதலீடு செய்வதை தொடர்வோம்.

எந்தெந்த ஊழியர்களின் பெயர் இப்பட்டியலில் உள்ளதோ அவர்களுக்கு இன்றிலிருந்து இவ்வார இறுதிக்குள் இது குறித்த தகவல் தெரிவிக்கப்படும்.

வெளியேறும் ஊழியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளோம்.

இவ்வாறு அலெக்ஸ் கூறினார்.

பேபாலில் சுமார் 29,900 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். எனவே, 2500 பணியாளர்கள் பணியிழக்க போவதாக தெரிகிறது.

Tags:    

Similar News