உலகம்

மிரட்டல் விவகாரம்- இம்ரான்கான் கைதாவாரா? வீடு முன்பு தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு

Published On 2022-08-22 09:54 GMT   |   Update On 2022-08-22 09:54 GMT
  • 2 முறை எப்.ஐ.ஏ அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு.
  • 3-வது முறையும் அவர் ஆஜராக மறுத்தால் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக அதனை விசாரிக்கும் எப்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மூலம் பதவி இழந்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தற்போதைய பிரதமர் ஷபாஷ் செரீப் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இஸ்லாமாபாத்தில் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி சார்பில் நடந்த பொது கூட்டத்தில் இம்ரான் கான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் அரசை கண்டித்து ஆவேசமாக பேசினார். மேலும் அங்குள்ள தேர்தல் ஆணையம், தலைமை போலீஸ் அதிகாரி, பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து அவரது பேச்சை நேரடியாக டிவியில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டு உள்ளது. பதிவு செய்யப்பட்ட அவரது உரையை தீவிர கண்காணிப்புக்கு பிறகே ஒளிபரப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இம்ரான்கானின் சர்ச்சை பேச்சு பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர் மீது பயங்கரவாத தடுப்பு வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது. இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டு முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்து உள்ளனர். பாகிஸ்தான் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் திரண்ட வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் நிலவி வருகிறது.

இம்ரான்கான் ஒரு வேளை கைது செய்யபட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு இம்ரான்கான் வக்கீல்கள் மூலம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்ய இருக்கிறார். இதில் அவருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? என்பது தெரியவில்லை.

ஏற்கனவே இம்ரான்கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப்கட்சி வெளிநாடுகளில் பெற்ற உதவியை குறைத்து காட்டியதாக அந்த நாட்டின் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் இம்ரான்கான் நேரில் ஆஜராக வேண்டும் என நோட்டீசஸ் அனுப்பப்பட்டது. ஆனால் 2 முறை எப்.ஐ.ஏ அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகததால் அவர் மீ து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

3-வது முறையும் அவர் ஆஜராக மறுத்தால் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக அதனை விசாரிக்கும் எப்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுவும் இம்ரான் கானுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News