உலகம்

இந்திய வம்சாவளி அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு

Published On 2024-01-18 06:31 GMT   |   Update On 2024-01-18 06:31 GMT
  • ஈஸ்வரன் அந்நாட்டின் ஆளும் கட்சியான பிஏபி-யை சேர்ந்தவர்
  • உலகிலேயே சிங்கப்பூரில்தான் அமைச்சர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது

சிங்கப்பூரில் போக்குவரத்து, வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளில் அமைச்சராக இருந்தவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுப்ரமணியம் ஈஸ்வரன் (60).

கடந்த 2023 ஜூலை மாதம், அந்நாட்டின் ஆளும் கட்சியான பிஏபி (People's Action Party) கட்சியை சேர்ந்த ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார்.

பல கோடி ஊழல் செய்ததாக 27 குற்றச்சாட்டுக்கள் ஈஸ்வரன் மீது வழக்கு பதிவாகி, தற்போது அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

முக்கிய குற்றச்சாட்டாக, சிங்கப்பூரில் எஃப் 1 (F1) எனப்படும் அதிவேக கார் பந்தயத்தை ஆங் பெங் செங் (Ong Beng Seng) எனும் கோடீசுவரர் நடத்த ஈஸ்வரன் சட்டவிரோதமாக வழிவகை செய்ததாக கூறப்பட்டுள்ளது.

தான் செய்த உதவிக்கு பதிலாக ஈஸ்வரன், பல விமான பயணங்கள், சுற்றுலா, உலகின் பெரும் நட்சத்திர ஓட்டல்களில் பல முறை இலவசமாக தங்கும் வசதி, இலவச ஃபார்முலா 1 கார் பந்தய டிக்கெட்டுகள் உள்ளிட்ட பல சலுகைகளை 1,60,000 சிங்கப்பூர் டாலர் மதிப்பிற்கு அந்த கோடீசுவரரிடமிருந்து பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

27 குற்றச்சாட்டுகளிலும் "ஆங்" ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.


அமைச்சர்களுக்கு அதிக ஊதியம் தருவதில் உலகிலேயே சிங்கப்பூர் முதல் இடம் வகிக்கிறது.

அமைச்சர்களும், அரசாங்க அதிகாரிகளும் அதிக ஊதியம் பெற்றால், ஊழலில் ஈடுபடாமல் நேர்மையாக பணி புரிவார்கள் என அந்நாட்டில் நீண்ட காலமாக ஒரு நம்பிக்கை உள்ளது.

அந்நாட்டில் அமைச்சர்களின் தொடக்க மாத ஊதியமே 50,000 சிங்கப்பூர் டாலருக்கும் மேல் இருக்கும்.

1986ல் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவாகும் நிலையில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

சுமார் 37 ஆண்டுகள் கடந்து தற்போது ஈஸ்வரன் மீதான இந்த ஊழல் குற்றச்சாட்டு உலக அரங்கில் பேசப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News