உலகம்

நான் பணய கைதி போல உணர்கிறேன்.. பதவி விலக முகமது யூனுஸ் முடிவு? - வங்கதேசத்தில் மாறும் காட்சி!

Published On 2025-05-23 11:11 IST   |   Update On 2025-05-23 11:12:00 IST
  • எல்லா அரசியல் கட்சிகளும் ஒரு பொதுவான புரிதலுக்கு வர முடியாதா?
  • யூனுஸின் ராஜினாமா அச்சுறுத்தலுக்குப் பின்னால் ஒரு உத்தி இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த வருடம் நடந்த மாணவர் போராட்டத்தால் அவாமி லீக் அரசின் ஆட்சி கழிவிந்தது. தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் புதிதாக அமைந்த இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில் முகமது யூனுஸ் நாட்டின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது,

அனைத்துக் கட்சிகளும் அவருக்கு முழு ஆதரவை வழங்காவிட்டால், பதவி விலகுவேன் என்று அவர் எச்சரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ராணுவத் தளபதி ஜெனரல் வக்கார்-உஸ்-ஜமான் வலியுறுத்தியுள்ளார். வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) தேர்தலை நடத்துவதற்கான தெளிவான திட்டத்தைக் கோரி தனது போராட்டங்களைத் தொடங்கியுள்ளது.

இந்த சமீபத்திய அரசியல் சூழல் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் தன்னால் வேலை செய்ய முடியாது என யூனுஸ் தெரிவித்ததாக தேசிய குடிமக்கள் கட்சி (NCP) தலைவர் நஹீத் இஸ்லாம் பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார்.

"ஐயா (யூனுஸ்) ராஜினாமா செய்தியைக் கேள்விப்பட்டோம். அதனால் அந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க நான் அவரை சந்திக்கச் சென்றேன். அவர் அதைப் பற்றி யோசித்து வருவதாகக் கூறினார். வேலை செய்ய முடியாத அளவுக்கு நிலைமை இருப்பதாக அவர் உணர்கிறார்" என்று நஹீத் இஸ்லாம் தெரிவித்தார்.

மேலும் யூனுஸ் தன்னிடம், "நான் பணய கைதியாக வைக்கப்பட்டிருப்பது போல் இருக்கிறது. நான் இப்படிச் செயல்பட முடியாது. எல்லா அரசியல் கட்சிகளும் ஒரு பொதுவான புரிதலுக்கு வர முடியாதா?" என்று கூறியதாக நஹீத் தெரிவித்தார்.

மறுபுறம், யூனுஸின் ராஜினாமா அச்சுறுத்தலுக்குப் பின்னால் ஒரு உத்தி இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். தேர்தல்கள் எப்போது நடத்தப்பட்டாலும் யூனுஸின் பதவிக்காலம் முடிவடையும்.

இந்த சூழலில், ராணுவத் தளபதிக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதால் இதற்கு எதிராக மாணவர்கள் மற்றும் இஸ்லாமிய குழுக்களை தூண்டிவிட்டு புதிய அமைதியின்மையை உருவாக்க யூனுஸ்  திட்டமிடுகிறாரா? என்ற ஒரு சாரார் சந்தேகிக்கின்றனர். .

Tags:    

Similar News