உலகம்

ஸ்வீடன் நேட்டோ உறுப்பினராக ஹங்கேரி பாராளுமன்றம் ஒப்புதல்

Published On 2024-02-27 11:19 GMT   |   Update On 2024-02-27 11:19 GMT
  • நேட்டோ உறுப்பினரை எந்த நாடு தாக்கினாலும் அனைத்து நாடுகளும் ஒன்றாக எதிர்க்கும்
  • நீண்ட காலமாக ஸ்வீடன் எந்த போரிலும் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்தது

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்காவின் தலைமையில் 31 நாடுகள் ஒன்றிணைந்து அமைத்த அணி நேட்டோ (North Atlantic Treaty Organization).

நேட்டோ அமைப்பில் உள்ள ஒரு நாட்டை வேறொரு நாடு தாக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முற்பட்டால், அனைத்து நேட்டோ நாடுகளும் ஒருங்கிணைந்து அந்த நாட்டிற்கு ஆதரவாக நிற்கும்.

நேட்டோ அமைப்பில் ஒரு நாடு உறுப்பினராக சேர விரும்பினால், அனைத்து நாடுகளும் அந்த விண்ணப்பத்தை அங்கீகரிக்க வேண்டும்.

சுமார் 200 வருடங்களாக எந்த உலகப் போரிலும் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்த ஸ்வீடன், ரஷிய-உக்ரைன் போருக்கு பிறகு அமெரிக்க-சார்பு நிலைக்கு மாறியது.

2022ல் உக்ரைனை ரஷியா ஆக்கிரமித்த பிறகு ஸ்வீடன், (NATO) நேட்டோ அமைப்பில் உறுப்பினராக விண்ணப்பித்தது.

ஆனால், ஸ்வீடன் தனக்கு எதிரான நாடு எனக் கூறி ஸ்வீடனின் இணைப்பை ஹங்கேரி ஆதரிக்க மறுத்து வந்தது.

இந்நிலையில், ஹங்கேரி தனது நிலையை மாற்றி கொண்டது.

ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பன் (Viktor Orban), "இரு நாடுகளும் ஒருவருக்காக மற்றொருவர் இறக்கவும் தயாராக உள்ள நாடுகள்" எனக் கூறி ஸ்வீடன் நேட்டோவில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்தார்.


ஹங்கேரியின் ஒப்புதல் குறித்த தகவல் வந்த நிலையில் நேற்று ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் க்ரிஸ்டர்ஸன் (Ulf Kristersson) மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஹங்கேரியின் இந்த முக்கிய முடிவு குறித்து நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க், "நேட்டோ, முன்னை காட்டிலும் வலுவான மற்றும் பாதுகாப்பான அமைப்பாகவும் மாறி விட்டது" என (Jens Stoltenberg) தெரிவித்தார்.

மற்றொரு நேட்டோ உறுப்பினர் நாடான துருக்கி, தனது நாட்டிற்கு எதிரான குர்து இன பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டி ஸ்வீடன் இணைய சம்மதிக்கவில்லை.

ஆனால், கடந்த ஜனவரி மாதம், தனது முடிவை மாற்றிக் கொண்ட துருக்கி, ஸ்வீடன் நேட்டோ உறுப்பினராக ஆதரவளித்தது.

Tags:    

Similar News