உலகம்

"திரும்பி செல்லுங்கள்.."- இந்திய மாணவர்களை அச்சுறுத்தும் உக்ரைன் மக்கள்

Published On 2023-08-20 19:56 IST   |   Update On 2023-08-20 19:56:00 IST
  • உள்ளூர்வாசிகள் இந்தியா ரஷியாவிற்கு துணை நிற்பதாக கருதுகின்றனர்
  • கடைக்காரர்கள் இந்தியர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய மறுக்கின்றனர்

உக்ரைனிலுள்ள பல்கலைகழகங்களில் மருத்துவம், உயர் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு பட்டங்களுக்காக இந்திய மாணவர்களும், மாணவியர்களும் அங்கு சென்று, அங்கேயே தங்கி, படித்து, பட்டம் பெறுவது வழக்கம்.

கடந்த 2022ல் ரஷியாவிற்கும் உக்ரைனிற்கும் போர் தொடங்கி தற்போது வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

போர் தொடங்கிய சில நாட்களிலேயே, உக்ரைனில் வசித்து வந்த இந்தியர்களின் உயிரிழப்புகளை தடுக்க இந்திய அரசாங்கம் விரைவாக நடவடிக்கைகளை மேற்கொண்டது. அங்கிருந்து சுமார் 18,000 மாணவர்களும் மாணவியர்களும் இந்தியாவிற்கு அவசரமாக மீட்டு வரப்பட்டனர்.

அவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்தி இங்கு வரவேண்டி இருந்ததால், மருத்துவ கல்வியில் அவர்களுக்கு தடைபட்ட கல்வியை இந்தியாவில் உள்ள பல்கலைகழகங்களில் தொடர்ந்து படிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அவர்கள் நம்பினார்கள்.

ஆனால் மருத்துவ படிப்பில் தேசிய மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதல்களின்படி 2021 டிசம்பருக்கு பிறகு வெளிநாட்டில் பயிலும் மாணவர்கள், வேறு பல்கலைக்கழகத்திற்கு மாறி படிப்பை தொடர முடியாது.

இதனால், சுமார் 3400 மருத்துவ மாணவர்களும் மாணவியர்களும் தடைபெற்ற கல்வியை தொடர இந்த வருடம் ஜனவரி மாதம் உக்ரைனுக்கே மீண்டும் சென்று அங்கு படித்து வருகின்றனர்.

அங்கு நடைபெறும் போரினால் மின்சாரம், குடிநீர், உணவு மற்றும் போக்குவரத்து ஆகியவை சீரற்று இருக்கிறது. ஏவுகணைகளாலும் டிரோன் தாக்குதளாலும் உயிரிழக்கும் அபாயங்களையும் அவர்கள் எதிர்கொண்டு படித்து வருகின்றனர்.

இந்நிலையில் வேறொரு சிக்கலை அவர்கள் அனுபவிக்க தொடங்கியிருக்கிறார்கள்.

போரில், இந்தியா ரஷியாவிற்கோ, உக்ரைனுக்கோ ஆதரவு அளிக்காமல் நடுநிலை வகிக்கிறது. ஆனால், உக்ரைனில் வசிக்கும் அந்நாட்டு மக்கள் இந்தியா ரஷியாவிற்கு துணை நிற்பதாக கருதுகின்றனர்.

இது குறித்து அந்த மாணவர்கள் தெரிவித்ததாவது:

கடந்த இரு மாதங்களாகவே பல கடைக்காரர்கள் இந்தியர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய மறுக்கின்றனர். தங்கும் விடுதிகளில் ஊழியர்கள் கடுமையாக நடந்து கொள்கின்றனர். உள்ளூர்வாசிகள் கோபத்துடன் எங்களை திரும்பி போக சொல்கின்றனர். விலைவாசி கிட்டத்தட்ட இரு மடங்காகிவிட்டது. நாங்கள் இந்திய அரசாங்கத்திற்கு கடிதங்கள் எழுதுகிறோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

இவ்வாறு அவர்கள் வருத்தத்துடன் கூறினார்கள்.

Tags:    

Similar News