உலகம்

'வருந்துகிறேன், மன்னிப்புக் கேட்கிறேன்' - எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பாக பில் கேட்ஸ் விளக்கம்

Published On 2026-02-05 14:51 IST   |   Update On 2026-02-05 14:51:00 IST
  • பிரதமர் மோடியின் பெயரும் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றுள்ளது.
  • நிச்சயமாக ஜெஃப்ரி தனக்குத்தானே ஒரு மின்னஞ்சலை எழுதியிருக்கிறார்.

அமெரிக்க நீதிமன்றம் வெளியிட்ட 'எப்ஸ்டீன் கோப்புகள்' உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காரணம் உலகின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளது. அதில் குறிப்பிடத்தக்கவர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப், பிரதமர் மோடி, தொழிலதிபர் பில் கேட்ஸ் ஆவர்.

இந்நிலையில் பில் கேட்ஸ் இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்புக் கோரியுள்ளார். சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளில், பில் கேட்ஸ் பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதனால் அவருக்குப் பாலியல் தொற்று நோய் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்தத் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், எப்ஸ்டீன் தன்னை அவதூறு செய்வதற்காகவே அத்தகைய மின்னஞ்சல்களை எழுதியிருப்பார் என்றும் பில் கேட்ஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பில் கேட்ஸ்,

"அவருடன் நான் கழித்த ஒவ்வொரு நிமிடத்திற்கும் வருந்துகிறேன், நான் அப்படிச் செய்ததற்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்," என்று கேட்ஸ் கூறினார். "நிச்சயமாக ஜெஃப்ரி தனக்குத்தானே ஒரு மின்னஞ்சலை எழுதியிருக்கிறார். நான் அவர் குறிப்பிட்டுள்ளவாறு எந்த மின்னஞ்சலையும் எழுதவில்லை. மேலும் அதில் உள்ள தகவல்கள் பொய்யானவை. அவருடைய உள்நோக்கம் என்னவாக இருந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவர் ஏதோ ஒரு வகையில் என்மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளார்." என்று தெரிவித்தார்.

மேலும் எப்ஸ்டீன் ஏற்கனவே பாலியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட பிறகும் 2011 இல் அவரை சந்தித்ததாக கேட்ஸ் ஒப்புக்கொண்டார். ஆனால் ஒருபோதும் எப்ஸ்டீனின் தனியார் தீவுக்கு சென்றதில்லை என்றும் தெரிவித்துள்ளார். "அவருடன் நேரத்தைச் செலவிட்டது நான் செய்த முட்டாள்தனம், அவரைத் தெரிந்ததற்காக வருந்தும் பல நபர்களில் நானும் ஒருவன்." என்றும் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இதுதொடர்பாக பேசியிருந்த பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டா, எப்ஸ்டீன் தொடர்பான இந்த ஆவணங்கள் தனது திருமண வாழ்க்கையின் வேதனையான நினைவுகளை மீண்டும் கொண்டு வருவதாகவும், இது தொடர்பாக பில் கேட்ஸ் பதிலளிக்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News