உலகம்

7 ஆயிரம் பேருக்கு சிக்குன்குனியா பாதிப்பு- சீன பயணத்தை தவிர்க்குமாறு அமெரிக்கா எச்சரிக்கை

Published On 2025-08-06 07:26 IST   |   Update On 2025-08-06 07:26:00 IST
  • காய்ச்சல், உடல் வலி போன்ற லேசான அறிகுறிகள் இருந்தாலே அருகில் உள்ள ஆஸ்பத்திரியை அணுகி சோதனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
  • பூந்தொட்டிகள், டயர்கள் போன்ற தண்ணீர் தேங்கும் இடங்களை அப்புறப்படுத்த வேண்டும்.

சீனாவில் சமீப காலமாக சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தெற்கு குவாங்டாங் மாகாணத்தின் போஷான் உள்ளிட்ட 12 நகரங்களில் இந்த தொற்று வேகமெடுத்துள்ளது.

இதனால் கடந்த ஒரு மாதத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்குன்குனியா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே சீன பயணத்தை தவிர்க்குமாறு தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.

இதனையடுத்து கொரோனா தொற்று காலத்தில் எடுக்கப்பட்டதுபோல விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி சிக்குன் குனியா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த பிறகே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மேலும் காய்ச்சல், உடல் வலி போன்ற லேசான அறிகுறிகள் இருந்தாலே அருகில் உள்ள ஆஸ்பத்திரியை அணுகி சோதனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து அந்த நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிக்குன்குனியா தொற்று பரவுவதற்கு முக்கிய காரணம் கொசுக்களே. தேங்கும் தண்ணீரில்தான் அவை அதிகளவில் உற்பத்தியாகின்றன.

எனவே பூந்தொட்டிகள், டயர்கள் போன்ற தண்ணீர் தேங்கும் இடங்களை அப்புறப்படுத்த வேண்டும். மீறினால் சுமார் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News