உலகம்

நாளை நடைபெறுகிறது அலெக்சி நவால்னி இறுதிச்சடங்கு

Published On 2024-02-29 15:15 GMT   |   Update On 2024-02-29 15:15 GMT
  • கடந்த சில தினங்களுக்கு முன் அலெக்சி நவால்னி திடீரென சிறையிலேயே உயிரிழந்தார்.
  • மாஸ்கோ தேவாலயத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோ:

ரஷிய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி (47), மீது இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. இதனால் கடந்த 2013-ல் பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், கோர்ட் அவமதிப்பு உள்பட பல்வேறு வழக்குகளில் அலெக்சி நவால்னிக்கு மொத்தம் 19 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.

சில தினங்களுக்கு முன் அலெக்சி நவால்னி திடீரென சிறையிலேயே உயிரிழந்ததாக ரஷிய ஊடகங்களில் செய்தி வெளியானது. அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்துள்ள அதிபர் புதினுக்கு அலெக்சி நவால்னியின் மரணம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, நவால்னியின் உடலை ரஷிய அரசு தங்களிடம் ஒப்படைக்க மறுப்பதாக அவரது மனைவி, தாயார் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், அலெக்சி நவால்னியின் இறுதிச்சடங்கு மார்ச் 1-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, நவால்னியின் செய்தி தொடர்பாளர் கிரா யார்மிஷ் கூறுகையில், மாஸ்கோவின் தென்கிழக்கு மரியினோ மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தில் மார்ச் 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அலெக்சி நவால்னியின் இறுதிச்சடங்கு நடைபெறும். பின் அருகில் உள்ள மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News