உலகம்

பிலிப்பைன்சை சூறையாடிய நால்கே புயல் - பலி எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு

Published On 2022-10-30 02:05 GMT   |   Update On 2022-10-30 02:05 GMT
  • நால்கே புயல் பிலிப்பைன்சின் மகுயிண்டனாவ் மாகாணத்தை பந்தாடியது.
  • புயல் மழையை தொடர்ந்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மணிலா:

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை நால்கே என்கிற சக்திவாய்ந்த புயல் சமீபத்தில் தாக்கியது. குறிப்பாக இந்த புயல் அங்குள்ள மகுயிண்டனாவ் மாகாணத்தை பந்தாடியது. மணிக்கு பல கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன.

கட்டிடங்களின் மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. சாலைகளில் வாகனங்கள் உருண்டன. புயலை தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. இடைவிடாது கொட்டிய பேய் மழையால் மகுயிண்டனாவ் மாகாணத்தின் பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகின. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. புயல் மழையை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. மலைப்பாங்கான சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்தன.

புயல், கனமழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 30க்கும் அதிகமானோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Tags:    

Similar News